திராவிட வெற்றிக் கழகத்தின் சட்டத் திட்ட கொள்கை கோட்பாடு புத்தக வெளியீடு விழா !
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 18.02.2026 பகல் 11.30 மணிக்கு மல்லை சத்யா தலைமையில் இயங்கி வரும் திராவிட வெற்றிக் கழகத்தின் அரசியல் சட்ட திட்டங்கள் / கொள்கை கோட்பாடுகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. திராவிட வெற்றிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட சடடத் திருத்தக் குழுவின் தலைவராக சேலம் ஆனந்தராஜ், திருச்சி பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், திராவிட ரத்னா இளவழகன், பேராசிரியர் வாசுகி பெரியார்தாசன், வழக்கறிஞர் சதீஷ்பாபு ஆகியோரைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு நேரிலும் இணைய வழியிலுல் பலமுறை ஆலோசனைகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து திராவிட வெற்றிக் கழகத்தின் அரசியல் சட்ட திட்டங்கள் / கொள்கை கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டது. அந்தச் சட்டங்கள் அடங்கிய நூலைச் சட்டத்திட்டக் குழு செயலாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன், தலைவர் ஆனந்தராஜ், இளவழகன், சதீஷ்பாபு ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யாவிடம் வழங்கினர். அதை ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா பெற்றுக் கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா, “திராவிட வெற்றிக் கழகத்தின் சட்டத் திட்டங்கள் கொள்கை கோட்பாடுகள் அடங்கிய இந்த நூலை திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் நடேசனார், சிங்காரவேலனார் பிறந்தநாளில் வெளியிடுவது என்று முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் சட்டத் திருத்தக் குழுவினர் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். திராவிட வெற்றிக் கழகத்தின் சட்டத் திட்டங்களின் அடிப்படையில் தலைமை பொறுப்பில் உள்ள ஒரு பொறுப்பாளர் 10 ஆண்டுகள் மட்டுமே பொறுப்பில் இருப்பார்கள். மறுபடியும் அவர்கள் தலைமை பொறுப்புக்கு வரமுடியாது. கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் குழு பொறுப்பிலிருந்து திராவிட வெற்றிக் கழகத்தை வழி நடத்துவர்.
பிப்.20ஆம் நாள் திராவிட வெற்றிக் கழகத்திற்காக சென்னை நீலாங்கரையில் தலைமைக் கழகம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகின்றது. வருகின்ற 23ஆம் தேதி தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செல்கிறேன். நாங்கள் பதிவு செய்திருக்கின்ற திராவிட வெற்றிக் கழகம் தொடர்பாக சில ஆணவங்களைக் கேட்டிருக்கிறார். அந்த ஆவணங்களை ஒப்படைக்கின்றேன்.
தொடர்ந்து பிப்.28ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு எழும்பூர் சிராஜ் மஹாலில் கழகத்தின் முதல் பொதுக்குழு நடைபெறுகின்றது. அந்தப் பொதுக்குழுவில் தற்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட சட்டத் திட்டங்கள் மற்றும் கொள்கை கோட்பாடுகளுக்கு ஒப்புதல் பெறப்படும். பொதுக்குழுவில் சட்டத் திட்டங்களில் இன்னும் சேர்க்கப்பட வேண்டியது அல்லது நீக்கப்பட் வேண்டியது குறித்து ஆலோசனை செய்யப்படும். பொதுக்குழுவில் கட்சியின் உயர்மட்ட பொறுப்பான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள். அதே நாளில் மாலை சிறுபான்மைப் பிரிவின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
திராவிட வெற்றிக் கழகம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகின்ற தளபதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்று எண்ணுகிறோம். எந்த அணியில் கூட்டணி சேருவது? தேர்தல் போட்டியிடுவது என்பதைக் கழகத்தின் உயர்மட்ட அமைப்பான பொதுக்குழுவில் ஆலோசனை செய்து முடிவை மேற்கொள்வோம். எங்களுடன் நட்பு கொண்டிருந்த நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதைத் தொடர்ந்து திராவிட வெற்றிக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்குமா என்று கேட்கின்றீர்கள், திராவிட வெற்றிக் கழகம் அடுத்த நூற்றாண்டுக்கும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைக் கோட்பாடுகளை கொண்டு செல்லும் பணியைச் செய்யவிருகின்றோம் என்பதே எங்களின் பதிலாகும்” என்று கூறினார்.
மேலும் அவர் பேசும்போது,“நான் கொண்ட தலைவர் வைகோ என்றுதான் இருந்தேன். அவரோடுதான் என் அரசியல் வாழ்வு என்று எண்ணியிருந்தேன். துரைவைகோ இயக்கத்திற்கு வரவேண்டும் என்று பேசியவன் நான். அரசியல்படுத்தப்படாத துரைவைகோவிற்குக் கட்சியில் பொறுப்பு, மக்களவையில் போட்டியிடும் வாய்ப்பு இவை வழங்கப்பட்டது. இதனால் அவர் கட்சிக்காக உழைத்தவர்களை வெளியேற்றுவதில் குறியாகவே இருந்தார். அதன் அடிப்படையில் நான் மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன். என்னுடைய தற்காப்பு கலைப் பயிற்சி, என்னுடைய தமிழ்ச்சங்கப் பணிகள் உலகளாகவிய அளவில் செயல்படுகின்றது. இதில் செயல்படுவோம் என்று நினைத்த நிலையில், நான் வீழ்வேன் என்று பலரும் நினைத்தார்கள். நான் வீழமாட்டேன். உறுதியாக நிற்பேன் என்று என் ஆதரவாளர்கள் கொடுத்த அன்பினால் திராவிட வெற்றிக் கழகம் உதயமானது. இதற்கு உதவிய வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.










Comments are closed, but trackbacks and pingbacks are open.