“நூலக ஆர்வலர்” விருது பெற்ற சமூக நல ஆர்வலர் !
கோயம்புத்தூர் உடையாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கௌரிசங்கர். பதினான்கு வயதில் இருந்து சமூக நல சேவை சார்ந்து தொடர்ந்து இயங்கி வருபவர். பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பாக அவர் செய்து வருகின்ற சேவைகள், கோவை மாநகரில் மிகவும் பிரபலம்.
தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது – 2௦25, சமீபத்தில் சென்னையில் பெற்றுள்ளார் கௌரிசங்கர். கோயம்புத்தூர் மாநகராட்சி, சௌரிபாளையம் கிளை நூலகத்தின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான தீவிர வாசகர் அவர். சமீபத்திய நான்கைந்து ஆண்டுகளில் அந்தக் கிளை நூலகத்தின் வாசகர் வட்டத் தலைவர்.
“என்னுடைய வீட்டுக்கும் சௌரிபாளையம் நூலகத்துக்கும் முக்கால் கிலோ கிலோ மீட்டர் தூரம் தான். நடைப்பயிற்சி போலவே நான் அந்த நூலகத்துக்கு சென்று, புத்தகங்கள் எடுத்துப் படித்து விட்டு மீண்டும் நடந்தே வந்து விடுவேன். வாசித்தலுக்குப் புத்தகங்கள். சுவாசித்தலுக்கு நடைப்பயிற்சி. ஒன்று மனதுக்கு நல்லது. மற்றொன்று உடலுக்கு நல்லது.” எனக் கூறி விட்டுப் புன்னகை பூக்கிறார்.
“வாசகர் வட்ட உறுப்பினராக இருந்த போதும் சரி, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வாசகர் வட்டத் தலைவராக இயங்கி வருகின்ற இப்போதும் சரி, எங்கள் கிளை நூலக வளர்ச்சி தான் முக்கிய நோக்கம். அதன்படி உறுப்பினராக இருந்த போதே ஒவ்வொரு ஆண்டிலும் எங்கள் பகுதியின் மாநகராட்சி பள்ளிகளுக்குச் சென்று, பிள்ளைகளிடையே, நூலக வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விழிப்புணர்வினை மேம்படுத்தி வந்துள்ளோம். அதன் விளைவாக மாநகராட்சி பள்ளிகளில் ஐந்திலும், தனியார் பள்ளிகளில் மூன்றிலும் அங்கு பயிலும் பிள்ளைகள், எங்கள் கிளை நூலகத்தின் நிரந்தர உறுப்பினர்களாகப் பதிவு பெற்றுள்ளனர்.”

“ஆண்டுதோறும் நூலகக் கண்காட்சி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் தந்து பள்ளிப் பிள்ளைகளை உற்சாகப்படுத்துகிறோம். வாசிப்பை நேசிப்போம் என்பதற்காக புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்துகிறோம். இந்தக் கிளை நூலகம் பல ஆண்டுகளாகவே வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.
அதன் பின்னர் புரவலர்கள், நன்கொடையாளர்கள் எனப் பலரும் அள்ளித் தந்த நிதியுதவியினால் நூலகத்துக்கென இடம் வாங்கி அதில் கட்டிடம் கட்டி, கடந்த பத்தாண்டுகளாக சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது சௌரிபாளையம் கிளை நூலகம். தற்போது முதல் தளம் அமையப்பெற்று, மத்திய மாநில அரசுகளுக்கான வேலை வாய்ப்புப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவியர்க்கான அறிவு சார் மையமாகவும் அது இயங்கி வருகிறது.” என்கிறார்.
நூலகத் தந்தை பத்மஸ்ரீ எஸ்.ஆர். ரெங்கநாதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்படும் “நூலக ஆர்வலர்” விருதினை 2௦25ஆம் ஆண்டுக்கென பெற்றிருக்கிறார் கோவை உடையாம்பாளையம் கௌரிசங்கர். அவருக்கு வயது 44. கடந்த முப்பது ஆண்டுகளாக கோவை மாநகரில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையினை நிறுவி அதன் நேரடிச் செயல்பாட்டாளராக இயங்குபவர். தன்னார்வத் தொண்டர்கள் பலரும் அதில் அங்கம் வகிக்கின்றனர்.
பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வருகிறார்கள். சாலையோர ஆதரவற்றோர், மனப்பிறழ்வு மனிதர்கள் என தினசரி முந்நூறு நபர்களுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவளித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் தீபாவளி, ரம்ஜான், கிருஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளின் போது, அனைவரையும் ஒன்று கூட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி “மத நல்லிணக்க விழா” நடத்திச் சிறப்பிப்பது, கோவை பாரத மாதா நற்பணிகள் அறக்கட்டளையின் மிக முக்கியச் சிறப்பு நிகழ்வாகும்.
— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு








Comments are closed.