சைபர் கிரைம் விசாரணையில் மதுரை ஆதினம்!
உளுந்தூர் பேட்டை கார் விபத்து தொடர்பாக 2வது முறையாக மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்…
கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்ததேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டு பல்வேறு சைவ சமய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 2 ந் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் சென்றபோது உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலையில் மற்றொரு கார் தன் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாக கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதில் குறிப்பாக “குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்” கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி., காட்சியை காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர்வெளியிடுவதாக, கூறி அறிக்கை வெளியிட்டனர். வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மதமோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரைஆதீனத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய கோரி சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச்சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் அளித்து புகாரின் கீழ் சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் காவல்துறையினர் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் முன்ஜாமின் கோரி மதுரை ஆதினம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போது மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில்ஆஜராக கட்டாயம் இல்லை, காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் எனவும் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்துற்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜீலை 20 ஆம் தேதியன்று மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மதுரை ஆதினமடத்திற்கு நேரில் வருகை தந்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான காவல்துறையினர் மதுரை ஆதினத்திடம் ஒரு மணி நேரம் தனியாக விசாரணையை நடத்தினர்.
மதுரை ஆதினம் ஹெர்னியா குடல் இறக்க அறுவை சிகிச்சைமுடிவடைந்து மருத்துவ ஓய்வு எடுத்துவரும் நிலையில், படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 01.10.2025 அன்று 2-வது முறையாக மதுரை ஆதீனத்திற்கு வருகை தந்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்ம குமாரி , வீடியோபதிவுடன் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை தொடங்கியபோது மதுரை ஆதினம் தன்னால் எழுந்திருக்க முடியாது வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து கொடுக்க உதவியாகவும், தனது தரப்பு வாதத்தை சொல்வதற்கும் தனக்கு தன் மட உதவியாளரை உதவிக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என மதுரை ஆதினத்தின் கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்தனர்.
மதுரை ஆதீனம் மற்றும் அவருடைய ஓட்டுனர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது தொடர்பான பல்வேறு கேள்விகளை சைபர் கிரைம் காவல்துறையினர் எழுப்பினர். இந்தநிலையில் கடந்த முறை நடைபெற்ற விசாரணை என்பது ஆதீனம் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது முறையாக விசாரணை செய்வதற்காக (01.10.2025) அன்று சைபர் கிரைம் காவல்ஆய்வாளர் பத்மகுமாரி உள்ளிட்ட காவல்துறையினர் 11:20 மணியளவில் வருகை தந்தனர்.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு காவல் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து விசாரணை அதிகாரி பத்மகுமாரி மதுரை ஆதீனம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தவர் மீண்டும் விசாரணைக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு … பதில் அளிக்கமறுத்துவிட்டு வாகனத்தை நோக்கிச் சென்றார்.
பின்னர் ஆதீனம் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் …
ஆதீனம் அவர்கள் காவலர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சென்றமுறை அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்கள் ஆகிய காரணத்தினால் தன்னுடைய வயது மற்றும் மருத்துவரின் அறிவுரை உள்ளிட்டவைகளை எடுத்துக் கூறி விசாரணைக்கு நேரில் சென்னையில் ஆஜராக முடியாது என்று அவர் கூறியதை தொடர்ந்து காவலர்கள் நேரடியாகவே வருகை தந்து ஆதீனம் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சென்ற முறை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்ற வேளையில் தற்போது இரண்டாவது கட்டமாக 20 நிமிடங்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை குறித்த அனைத்தையும் அவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள், காவலர்களின் விசாரணைக்கு சன்னிதானம் அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மேலும் என்ன கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்து வழக்கு விசாரணையில் இருப்பதால் அது குறித்து கூற முடியாது என்றார்.
— ஷாகுல், படங்கள் ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.