சுதந்திர தினத்தை கொண்டாடும் ”தேசிய மூவர்ண கொடி கண்காட்சி”
மதுரை இரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி கண்காட்சியினை ரயில் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ / மாணவிகள் என ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 15 அன்று இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த சுதந்திர தின விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி (ஹர் கர் டிரங்கா) ஏற்றி கொண்டாட ஊக்குவிக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்சாரம் ஆகஸ்ட் 2 துவங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற இருக்கிறது.
இந்த பிரச்சாரம் பற்றி ரயில் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் பகுதியில் “தேசிய மூவர்ணக் கொடி” என்ற பெயரில் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா திறந்து வைத்தார்.
கண்காட்சியில், தேசிய கொடியின் மகத்துவம், புனிதம், உருவான விதம், முக்கியத்துவம் போன்றவற்றை விளக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் செல்போன் மூலம் சுய புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் ‘செல்பி பாயிண்ட்’டும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
துவக்க விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். என். ராவ், ரயில்வே கட்டமைப்பு வேக சக்தி முதன்மை திட்ட மேலாளர் கே. ஹரிகுமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன் உட்பட அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகள், ரயில்வே பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்