சர்வதேச ஆண்கள் தினம் – சமூக உறவுகளில் ஆண்கள்!
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் சர்வதேச ஆண்கள் தினம், ஆண்கள் மற்றும் பையர்கள் எதிர்கொள்ளும் சுகாதார, மனநலம், சமூக மற்றும் உணர்ச்சி சார்ந்த சவால்களை வெளிக்கொணரும் முக்கிய நாளாகும்.
1999 ஆம் ஆண்டு திரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜெரோம் டீலக்சிங் இந்த நாளை அறிமுகப்படுத்தினார். இதன் நோக்கம் ஆண்களை பாராட்டுவதற்காக மட்டுமல்ல, அவர்களின் நலனையும் சமூகத்தில் அவர்கள் பங்களிக்கும் மதிப்பையும் உணர்த்துவதே ஆகும். பொதுவாக ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் சுமைகளை உள்ளே தாங்கிக்கொள்வார்கள்; சமூகமும் “ஆண்கள் என்கிறபோது வலி, பயம், துக்கம் காட்டக்கூடாது” என்ற தவறான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. இந்த பாகுபாடு, அவர்களின் மனநலத்தில் காணப்படும் ஆழமான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகும்.
உலக சுகாதார அறிக்கைகள், ஆண்களில் 75%–க்கு மேல் தற்கொலை விகிதம் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. பெண்களைவிட ஆண்களின் ஆயுட்காலம் 4–5 ஆண்டுகள் குறைவு என்பது மற்றொரு கவலைக்குரிய தகவல். வேலைஇடங்களில் ஏற்படும் உடல் அபாயம், நீண்ட வேலை நேரம், உடல் நல பரிசோதனைகளை தவிர்ப்பது, மனஅழுத்தம் பற்றிய பேசுவதைத் தவிர்க்கும் சமூக மனநிலை ஆகியவை ஆண்களின் நலனில் பெரும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நடுத்தர வயது ஆண்கள் வேலை இழப்பு, குடும்பப் பிரிவு, பொருளாதார அழுத்தம் போன்ற காரணங்களால் அதிகமாக மனஅழுத்தத்திற்கும் தனிமைக்கும் உள்ளாகிறார்கள்.
இந்த நாளின் ஆறு முக்கிய தூண்கள் , ஆண்களின் பங்களிப்புகளை கொண்டாடுதல், நேர்மறை ஆண்மை மதிப்புகளை ஊக்குவித்தல், பாலினப் புரிதல் வளர்த்தல், ஆண்களின் உடல்-மனம்-உணர்ச்சி நலனை மேம்படுத்துதல், ஆண்களுக்கு எதிரான அநியாயங்களை வெளிப்படுத்துதல், மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான உலகை உருவாக்குதல் ., சமூகத்தில் ஆண்கள் பற்றிய பார்வையை சமநிலைப்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமானது “Positive Masculinity.” இது ஆண்கள் கடினமாய் இருப்பதையும், உணர்ச்சிப் பதற்றத்தை மறைப்பதையும் வலியுறுத்தும் பழைய கருத்தை உடைத்து, பாசம், பொறுப்பு, பரிவு, உண்மைத்தன்மை போன்ற நல்ல மனித பண்புகளையும் ஆண்மையின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும் என்ற முன்னோட்டத்தை உருவாக்குகிறது.
இந்திய சமூகத்திலும், குறிப்பாக தமிழ் குடும்பங்களிலும், ஆண்கள் தங்கள் நலனை பின்னுக்கு தள்ளி குடும்ப பொறுப்புகளை முன்னிலைப்படுத்தும் பழக்கம் அதிகமுள்ளது. இதனால் அவர்கள் உடல்நலம், மனநலம் ஆகியவற்றை புறக்கணிப்பது அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகள் தாமதப்படுத்தப்படுவது, மனநலம் சார்ந்த உதவியைத் தேடுவதற்கான தயக்கம் போன்றவை ஆண்களின் நலனுக்கு தடையாகின்றன. இதை மாற்றுவதற்கான விழிப்புணர்வு இன்றியமையாத ஒன்று.
சர்வதேச ஆண்கள் தினம், பள்ளிகள், கல்லூரிகள், சமூக அமைப்புகள், மருத்துவ மையங்கள் ஆகியவை ஆரோக்கிய முகாம்கள், மனநல உரைகள், சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஒரு தளமாக செயல்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு, குடும்பத்தின் உணர்ச்சி ஆதரவில் ஆண்களின் பங்களிப்பு, பையர்களுக்கு உணர்ச்சி வெளிப்பாடு, மரியாதை, சமத்துவம் போன்ற மதிப்புகளை கற்பிப்பது ஆகியவை சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கின்றன.
இந்த நாள் ஆண்களை மட்டும் வாழ்த்துவது அல்ல; அவர்களைப் புரிந்து கொள்ளவும், அவர்கள் சந்திக்கும் பாரங்களை ஏற்றுக்கொள்ளவும், அவர்களின் நலனை முன்னிலைப்படுத்தவும் அழைக்கும் ஒரு விழிப்புணர்வு நாள். சமூகமானது ஆண்களின் உணர்ச்சி உலகையும், அவர்களின் சத்தமில்லாத போராட்டங்களையும் கவனத்திற்கெடுத்து, அவர்களுக்கு ஆதரவான சூழல் ஒன்றை உருவாக்க வேண்டும். குடும்பம், கல்வி, வேலை, சமூகம் என அனைத்து துறைகளிலும் ஆண்களின் நலனை உறுதிப்படுத்துவது ஒரு பரிவான, புரிதல் நிறைந்த சமூகத்திற்கு அவசியமான முதல் படி என்று இந்த சர்வதேச ஆண்கள் தினம் நமக்கு நினைவூட்டுகிறது.
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.