மக்களின் நிதி வீணடிப்பு! மேம்பாலப் பணியில் பல கோடி ஊழல் ! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு !
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசாணை மூலம் தொடங்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் நடைபெற்று வரும் இந்தப் பணியில் கடுமையான முறைகேடுகள் நிகழ்கின்றன.
சுமார் ₹62 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த ரயில்வே மேம்பாலத் திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து (50:50) நிதி வழங்கும் திட்டமாகும். ஆனால், இதன் நிறைவேற்றப் பணியில் 15 சதவீத கமிஷன் வாங்கி பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன,” என்றார்.
மேலும், “சிவகாசி மாநகராட்சியிலும் பல ஊழல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் வரி பணம் வீணாகி வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என கூறினார்.
மேலும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறிய இந்தக் குற்றச்சாட்டு, சிவகாசி மற்றும் சுற்றுவட்டார அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.