கடவுளை கட்சிக்கு இழுத்து அரசியல் செய்யக் கூடாது!
ஜூன்.22 -ல் மதுரையில் நடைபெறும் இந்து முன்னணியின் பண்பாட்டு படையெடுப்பு மாநாட்டை தமிழ்நாட்டில் வாழும் ஆன்மீகத்தில் உண்மையில் நாட்டம் கொண்ட மக்கள் புறக்கணிப்போம்.
மதுரையில் ஜூன்.22 அன்று இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாடு நடத்தவுள்ளது. இம்மாநாட்டில் நிகழ்த்தப்படும் ஆறுபடை வீடுகள் பூஜை, தமிழ் ஆகமங்களுக்கு நேர் எதிரானது. முருகன் சிலையை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யாமல், அரசியலுக்காக பொருட்காட்சி பொம்மைபோல் வைத்து பூஜை செய்வது முருகக்கடவுளை இழிவு செய்வதாகும். மாநாட்டில் பூஜிக்கப்படும் முருகன்சிலை ஆகம முறைப்படி உயிர் உண்டாக்கப்படாத பொம்மை மட்டுமே. உயிர் இல்லாத, சக்தி இல்லாத இந்து முன்னணியின் முருகன் பொம்மை சிலையை, மக்களை வணங்க வைப்பது பக்தியின் பெயரிலான மோசடி. ஆகமங்களின் மீதான நேரடி அத்துமீறல்.
ஆகமத்தின் பெயரால் 75 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட இந்துக்களை அறுபடை வீடுகளில் பூஜை செய்யவிடாமல் தடுக்கும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சார்யார்கள், குருக்கள் உள்ளிட்ட பார்ப்பன வைதீக சாதியினர், இந்து முன்னணி மாநாட்டில் ஆகம விதிகள் மீறப்படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பதேன்?
தமிழ் கடவுள் முருகனின் வாகனமான யானையை மாற்றி, வள்ளி என்ற குறவர் சமூகப் பெண்ணை மணந்த சமத்துவ முருகனுக்கு பூணூலை மாட்டி, முருகன் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்றி, தமிழர்களை ஆறுபடை வீடுகளில் இருந்து வெளியேற்றி, தமிழ் முருகனை சனாதன முருகனாக மாற்றி, முருகனையே களவாடிய கூட்டம் இன்று அரசியலுக்காக, மதவெறியைத் தூண்டி, மக்களிடையே பிளவை உருவாக்க முருக வேலை, சூலாயுதமாக மாற்றி, கையில் தூக்கி வருகிறது. ஆறுபடை வீடுகளில் தமிழில், தமிழர்கள் பூஜை செய்ய முடியவில்லை. தமிழில் குடமுழுக்கு நடத்த முடியவில்லை.
தமிழகத்தில் உள்ள ஆகமக் கோயில்களை எல்லாம், பார்ப்பனர்கள் நிரந்தரமாக கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு, திருச்சி குமார வயலூர் முருகன் கோயிலில் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில், முறையாக ஆகமம், வேதம், மந்திரம் கற்று தீட்சை பெற்ற இரண்டு பார்ப்பனர் அல்லாத பட்டதாரிகளை நியமனம் செய்ததைப் பொறுக்க முடியாத வயலூர் முருகன் கோயில் பார்ப்பன அர்ச்சகர்கள்,
அனைத்து சாதியினரை அர்ச்சககராக நியமித்த திமுக அரசு நாசமாய் போகட்டும் எனச் சாபம் விட்டதை தமிழ்நாடு கண்டது. சாபம் விட்ட பழைய வீடியோவை தற்போது மீண்டும் நியூஸ் தமிழ் 24 மற்றும் பாலிமர் போன்ற சங்கி ஊடகங்கள் ஒலிபரப்பி வருகின்றன.
தொடர்ந்து அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகராவதை தடுத்து வருகின்றன. இதையெல்லாம் பேசாத பாஜக, இந்து முன்னணி நடத்தும் ஆன்மீகத்தின் பெயரிலான அரசியல் மாநாட்டை முருக பக்தர்கள் புறக்கணித்து, உண்மையான ஆறுபடை வீடுகளில் உள்ள நம் முருகனை வழிபடுவோம். சங்பரிவாரை புறம்தள்ளுவோம் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தலைவர் வா.ரங்கநாதன் தொிவித்துள்ளார்.