பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய அர்ச்சகர் கைது ! பின்னணி என்ன ?
பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய அர்ச்சகர் கைது ! பின்னணி என்ன ?
ஆம்பூரில் கோவில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் தலைமை அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மையப்பகுதியில் அமைந்துள்ளது அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயில். திருமணம் தடை , குழந்தை வரம் வேண்டுவோர்களுக்கு பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட இந்த கோவிலின் அர்ச்சகராக இருக்கும் ஒருவர், திருமணம் வரம் வேண்டி வந்த பெண்களை திருமணங்கள் செய்து கொண்டதும்; மூன்றாவதாக வந்த ஒரு இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த தியாகராஜன்?
பாரிஸ் நாட்டில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக இருந்து வருபவர் அகோர மூர்த்தி. இவருடைய மகன் தான் தியாகராஜன் (40). ஆம்பூர் நாகநாத ஸ்வாமி கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடி பாரிஸ் உள்ள செகுயின் என்ற இடத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை சந்திக்க சென்றபோது தியாகராஜன்தான் கும்ப மரியாதையுடன் வரவேற்றவர்.
தியாகராஜன் குறித்து கோவில் பகுதியில் உள்ள தேங்காய் பழம் விற்பனை செய்துவருபவரிடம் விசாரித்தோம். பெயரை தவிர்த்துவிட்டு, ”அவன் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துள்ளான் தம்பி. அதில் இரண்டாவது திருமணம் செய்த பெண் நாகநாதன் ஸ்வாமி பக்தரும் கூட. இவரை போலதான் அந்த பெண்ணையும் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து கர்ப்பம் உண்டானதால், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டான். இவர்கள் மட்டுமின்றி பல பெண்களை வலையில் வீழ்த்தியுள்ளார் தியாகராஜன் அவனை சும்மா விடக்கூடாது” என்றார்கள்.
வாட்சப் சாட்டிங்
”இதோ அந்த பெண்ணோடு செய்த வாட்சப் சாட்டிங்கை பாருங்கள்” என்று அனுப்பி வைத்ததில், ”எல்லாரும் என்கிட்ட வந்து ஏத்துக்கிட்டவங்கதான் அதிகம். ஆனால், எனக்காக யாரும் இல்ல. எனக்காக யாராவது வாழ்வாங்களானு நினைச்சுகிடடு இருப்பேன். நான் மறுபடியும் சொல்றேன். நீ எனக்கு வேணும் சில விஷயம் சொல்லமுடியாது என் வேதனை என்னுடன் இருக்கனும். அழகிடி நீ ! .. உன்ன ரசிக்க ஒரு ஜென்மம் போதாது. உன் புடிக்க இரண்டு கை போதாது” என அடுத்தடுத்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளோடு விரிகிறது அந்த உரையாடல்.

போலீஸில் புகார்
இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன் மீது கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கோவில் பணிப்பெண் நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில், தியாகராஜன் அர்ச்சகராக உள்ள கோயிலில் கடந்த ஓராண்டாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் உழவாரப் பணி செய்து வந்தேன். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வலுகட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார். தற்போது திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுகிறார்.
மேலும், ”நான் செல்வாக்கான ஆள் உன்னால் ஒன்னும் செய்ய முடியாது. நான் நினைத்தால் நீ அவ்வளவுதான்” என கொலை மிரட்டல் விடுத்த தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
வழக்குபதிவு
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸாருக்கு எஸ்.பி ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அர்ச்சகர் தியாகராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வந்தனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அர்ச்சகர் தியாகராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கோயில் செயல் அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
கைது !
கைது நடவடிக்கைக்குப் பயந்து அர்ச்சகர் தியாகராஜன் பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கிருந்தவரை திருப்பத்தூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அர்ச்சகர் தியாகராஜன் இனி கோவிலில் பணி செய்ய கூடாது எங்களுக்கு (பக்தர்கள்) விருப்பமில்லை. அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளார்கள் பக்தர்கள்.
-மணிகண்டன்