செய்தியாளர்கள் உதவியுடன் நீட் தேர்வு மையத்திற்கு சென்ற மாணவர்!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதன் முறையாக நீட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 480 பேரும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் 360 பேரும் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
காலையிலிருந்து மாணவர்கள், பெற்றோர்கள் தேர்வு மையங்களில் குவிந்தனர்.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் அருகில் உள்ள நீதிமன்ற வளாகம், பிஎஸ்என்எல் அலுவலக வளாகம் , ஆங்காங்கே இருந்த மரத்தின் அடியில் மாணவர்களும் பெற்றோர்களும் கடும் வெயிலுக்கு இடையில் அமர்ந்து இருந்தனர். மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு என்பதால் மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவினை அங்கேயே சாப்பிட்டனர். குடிக்க குடிநீர் வசதி எதுவும் செய்யப்படவில்லை என்பதால் மாணவர்களும் பெற்றோர்களும் கடுமையாக அவதிப்பட்டனர்.
பின்னர் பலத்த சோதனைக்கு பின்னர் மாணவர்கள் தேர்வு அறைக்கு சென்றனர். தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் ரிஷிகிஷோர் என்பவர் ஒரிஜினல் ஆதார் அட்டை கொண்டு வரவில்லை என்பதால் மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து கோவில்பட்டி செய்தியாளர்கள் உதவியுடன் இ சேவை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு புதிதாக ஆதார் அடையாள அட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு பின்னர் அதை காண்பித்து தேர்வு மையத்திற்குள் சென்றார்.
போதுமான வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதால் கடுமையான வெயிலுக்கிடையில் பாதிக்கப்பட்டதாகவும், குடிப்பதற்கு குடிநீர் கூட கிடைக்கவில்லை, பெயரளவிற்கு தான் பந்தல் போட்டிருந்தனர். மரங்கள் இல்லை என்றால் தங்களுடைய பாடு திண்டாட்டம் தான். இனிவரும் காலங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
— மணிபாரதி.