சுடுகாட்டில் புதிய மாநகராட்சி கட்டிடமா? கடுப்பான மாஜி !
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல் பகுதியில், அதிமுக-வின் 54வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது “அதிமுகவினர் ஆன்மீகவாதிகள், வர்ண பகவான் நமக்கு ஆதரவாக இருக்கிறார். அதனால்தான் மழைப் பொழிவு சற்று நின்றுள்ளது, திமுக மக்களுக்காக எதையும் செய்யவில்லை,” என்றார்.
தங்கள் ஆட்சியில் செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க தைரியம் திமுகவிற்கு இல்லை. ஏனென்றால் மக்களுக்கான எந்த திட்டமும் திமுக செய்யவில்லை. திமுக சொன்னது மக்கள் நல திட்டங்கள், ஆனால் செய்தது மக்கள் விரோத திட்டங்கள் என விமர்சனம் செய்தார்.
மக்களுக்கான எந்த திட்டமும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி பிழைகின்ற கட்சி திமுக. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடையாது .
2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை திறந்து வைக்க கூட நான் சென்றதில்லை. ஆட்சிக்கு வந்த பின் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு மட்டும் நாங்கள் அடிக்கல் நாட்டினோம். தற்போதைய திமுக அரசு, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தாமதப்படுத்தி, தங்களது முயற்சி போல காட்டுகிறது.
சிவகாசி பிள்ளைக்கு கூலி பகுதியில் உள்ள சுடுகாட்டில் எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்து வெளியே போட்டுவிட்டு, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டியுள்ளனர். எதற்காக என்றால், ஏற்கனவே உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் கல்வெட்டில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ராஜேந்திரபாலாஜியின் பெயர் உள்ளதால், காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் இந்த புதிய கட்டிடம் சுடுகாட்டில் கட்டப்படுகிறது. புதிய அலுவலகம், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்காக அல்ல, ஒரு குடும்பம் வாழ்வதற்காக ஆட்சி நடத்தி வருகிறது, எனக் கூறினார்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.