”காந்தி ஜெயந்தி” முன்னிட்டு மது விலக்கு, போதை ஒழிப்பு கையெமுத்து இயக்கம் தொடக்கம்
உடலையும் கெடுத்து, உயிரையும் பறித்து குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைக்கும் மதுவை நாடலாமா?
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மதுவிலக்கு மற்றும் போதை விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்திருக்கிறார்கள்.
பொன்மலை பகுதியில் பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். காந்தியின் முகவேடம் அணிவித்து மாணவர்கள் சிலம்பம் சுழற்றி மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்புக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றனர். இதனைதொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் பொன்மலை பகுதியில் சிலம்பாட்டம் விளையாடி தொடங்கப்பட்டது.

இதில் ”வளமான வாழ்வுக்கும், உயர்வுக்கும் முழுமையான மதுவிலக்கை போதைப் பொருள் ஒழிப்பை ஆதரிப்பீர், நல்ல மது என்று அருந்தினால், அது மெல்ல மெல்லக் கொல்லும்; கள்ள மதுவோ உடனே கொல்லும் , இயற்கைக்கு முரணானது போதை! இல்லறத்துக்கு எதிரானது போதை! உடலையும் கெடுத்து, உயிரையும் பறித்து குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைக்கும் மதுவை நாடலாமா?” என்பதாக பரப்புரை இயக்கத்தை நடத்தினர்.
இந்நிகழ்வில், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைச் செயலாளர் ஆர்.இளங்கோ, நிர்வாகிகள் குமரன், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே.ராஜா, மோகன் ,தமிழ்நாடு சிலம்பம் இளையோர் சம்மேளனம் செயலாளர் நவீன் மற்றும் சிலம்ப மாணவர்கள், வீரமங்கை வேலுநாச்சியார் இளையோர் சங்க செயலாளர் கலைஇளமணி சுகித்தா பயிற்சியாளர்கள் மோகன், ராஜ்குமார், கோ.காசிலிங்கம், சூரியபிரகாஷ், மா.த.ரேஷ்விந்த், யாதேஷ் ,ராகவி, ஜீவிதா, மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
— கே.சி. நீலமேகம்.