தீபாவளி வரைக்கும் தான் … இதுக்கும் மேல எங்களால் சகிக்க முடியாது !
மதுரை மாநகராட்சியிலிருந்து அவர்லாண்ட் நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அக் 21 முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கத்தின்பாலசுப்பிரமணியன் மற்றும் விசிக தூய்மை பணியாளர் சங்கத்தின் பூமிநாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சி.ஐ.டி.யு. தூய்மைப் பணியாளர் சங்கத்தின் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டியில், மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியை மேற்கொண்டு வரும் அவர்லாண்ட் நிறுவனம் 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் விரோதப்போக்கு அதிகமாகி வருகிறது. கடந்த 22 மாதங்களில் 6.5 கோடி அளவில் தொழிலாளர்களின் சம்பளத்தை கையாடல் செய்துள்ளது.

சம்பளம் கேட்கச் சென்ற 23 பேர் தொழிலாளர்களை கேள்வி கேட்டார்கள் என்ற ஒரே காரணத்தினால் பணி நீக்கம் செய்துள்ளது. மதுரை மாநகராட்சி ஒப்பந்தத்திற்கு எதிராக அவர்லாண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதியை அவர்லாண்டு நிறுவனம் கையாடல் செய்துள்ளது. அவர்லாண்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மதுரை மாநகராட்சி நீட்டிக்கக் கூடாது. மதுரை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ள அவர்லாண்டு நிறுவனத்தின் அராஜகப் போக்கையும், 23 தூய்மைப் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், விசிக, CITU தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.
மதுரை சட்டமன்ற, மாமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம் அக் 21 முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தீபாவளிவரை தூய்மைப் பணிகளை மேற்கொள்வோம். அதற்கு அடுத்த நாளிலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பணிபுரியும் 5,000 – க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். வேலை நிறுத்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் மக்கள் பாதிக்க கூடாது என்பதால், தீபாவளி வரை தூய்மைப் பணி செய்ய முடிவு செய்துள்ளோம்” என கூறினார்.

இதனை தொடர்ந்து, விசிகவைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் பூமிநாதன் கூறுகையில், ”மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில், ஈடுபட்டு வருகிறார். மதுரை மாநகராட்சி ஆணையாளரை தமிழ்நாடு அரசு உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையும் முன்வைத்திருக்கிறார்கள்.
தீபாவளி வரை கெடு விதித்திருக்கிறார்கள். அதற்குள்ளாக, மதுரை மாநகராட்சி தரப்பில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.