நெல் தேக்கத்துக்கு இதுதான் காரணம் ! அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு !
சாத்தூர் வட்டம் நென்மேனி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா, திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், வட்டாட்சியர் ராஜாமணி, கோட்டாட்சியர் கனகராஜ், உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதமாகும் நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ள நிலையில், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களில் மழை பொழிவு குறைவாக உள்ளது. இப்பகுதிகளிலும் விரைவில் மழை பெய்து விவசாயம் சிறப்பாக நடக்க வேண்டும் என நம்புகிறோம்,” என அவர் கூறினார்.
அதே நேரத்தில், மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நிவாரண பணிகளை நேரில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பல மடங்கு நெல் விளைந்துள்ளது. இதுவரை 10 லட்சத்து 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தினசரி 13 ரயில்கள் மற்றும் 4,000 லாரிகள் மூலம் நெல் வெளியே அனுப்பப்படுகிறது,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்திற்கு இதுவரை அனுமதி வழங்காத காரணத்தால் நெல் கையிருப்புகள் தேக்கம் அடைந்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல் பரப்புகிறார். அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்; அதற்காக நம்முடைய முதலமைச்சர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்,” எனவும் தெரிவித்தார்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.