நீண்ட கால சிக்கலை தீர்க்குமா தமிழக அரசு! பகுதி நேர ஆசிரியா் கூட்டமைப்பு
ஆகஸ்ட் 14 அமைச்சரவை கூட்டம் அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 14ம் தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து, 15ம் தேதி சுதந்திர தின விழாவில், முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார்.
பொதுவாக அமைச்சரவை கூட்டத்தில், அரசு திட்டங்கள், கொள்கை முடிவுகள், புதிய சட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படுவது வழக்கம்.
இம்முறை முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
சுதந்திரம் தின அறிவிப்பில் முதல்வர் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும்.
இதன் மூலமாக தற்போதைய 12,500 ரூபாய் தொகுப்பூதியம் கைவிடப்பட்டு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்து காலமுறை சம்பளம் உள்பட அனைத்து சலுகைகள் கிடைக்கும். ஆனால் முதல்வராகி 51 மாதம் முடிந்தும் வேலையை நிரந்தரம் செய்யவில்லை.
2012 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி தையல் போன்ற சிறப்பு பாடங்களில் பகுதிநேர ஆசிரியர்களாக 16,549 பேர் பணி அமர்த்தப்பட்டார்கள்.
14 ஆண்டு முடிந்த நிலையில் தற்போது சுமார் 12 ஆயிரம் பேர் பணி செய்து வருகின்றார்கள். ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ரூபாய் 2,500 சம்பளம் உயர்த்தியதால் தற்போது ரூபாய் 12,500 சம்பளம் வழங்கப்படுகிறது.
மே மாதம் சம்பளம், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு தொகை, மரணம் அடைந்த குடும்பத்திற்கு நிவாரணம், போனஸ், பண்டிகை முன்பணம் போன்றவை மறுக்கப்படுவதால் இந்த சம்பள உயர்வு இன்றைய விலைவாசியில் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை.
வீட்டு வாடகை, மருத்துவ செலவு, குழந்தைகள் கல்வி, பெற்றோர் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை செலவுக்கு கடன் சுமையில் தவிக்கின்றார்கள்.
இதே உடற்கல்வி ஓவியம் தையல் இசை கணினி பாடங்களில் காலமுறை சம்பளத்தில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களைப்போல், பகுதிநேர ஆசிரியர்களையும் பணி அமர்த்த வேண்டும்.
நீண்ட காலமாக தொகுப்பூதியத்தில் சிக்கி தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்களின் கஷ்டத்தை போக்க சுதந்திர தின அறிவிப்பாக முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் அறிவிக்க வருகின்ற ஆகஸ்ட் 14 ந்தேதி அமைச்சரவை கூட்டத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிாியா் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.