மென்று முழுங்கும் ராஜா ! உசுப்பேத்தும் தமிழ்தேசிய குரூப்ஸ் !
”நீங்க என்ன ஆளுங்க?”னு சாதி குறித்து விசாரித்த குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் பட்டிமன்ற ராஜாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கிறது. இதற்கிடையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ராஜா.

வெறும் 3.5 நிமிடத்தில் வெளியிட்டிருக்கும் அந்த விளக்கத்தில்கூட, அப்படி நான் கேட்கவே இல்லை என்று உறுதியாக அவர் மறுக்கவில்லை. மாறாக, “காரைக்குடினு சொன்னாங்க. நான் செட்டிநாடானு கேட்ட நியாபகம் இருக்கு. செட்டியாரானு நான் கேட்கல. இவ்வளவு சுவையா செட்டிநாடு உணவு இருக்கேனுதான் கேட்டேன்னு நியாபகம் இருக்கு. கடவுள் அறிய அப்படி நடந்ததாக தெரியவில்லை.” என்பதாக பேசியிருக்கிறார்.
உலகம் அறிந்த பட்டிமன்ற பேச்சாளர். எதிர் தரப்பின் வாதங்களை கூர்ந்து கவனித்து அதற்கு அந்த கணத்திலேயே ஆணித்தரமாக பதிலளிக்கும் கலையை கைவசம் பெற்றிருப்பதாலேயே, அவர் புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஆனாலும் பாருங்களேன், ” நியாபகம் இருக்கு”, ”நடந்ததாக தெரியவில்லை” என்ற வார்த்தை பிரயோகத்தைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார். அதோடு மட்டுமல்ல; “ஒருவேளை பேசியிருந்தால் அப்போதே கேட்டிருக்கலாம்.” என்ற எதிர்கேள்வியை குற்றஞ்சாட்டிய பெண்மணிக்கு எதிராக திருப்பியிருப்பதோடு, இணையத்தில் உலவும் தனக்கு எதிரான ”கருத்துகளை புறந்தள்ளுங்கள்” என்ற வேண்டுகோளையும் தமிழ் சமூகத்தின் முன் வைக்கிறார்.
இதற்கு மத்தியில், தமிழினவாதம் பேசும் கும்பல் அப்படி அவர் கேட்டிருந்தாலும் அதில் தவறு ஒன்றுமில்லை என்று அப்பட்டமாக வரிந்துகட்டி கொண்டு நிற்கிறது. பிரபல யூடியூபர் பாரிசாலன் தனது பதிவில், “ அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் தெலுங்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உங்கள் தங்கை தமிழரா தெலுங்கரா என்று தெரிந்து கொள்ள கூட அவர் அவ்வாறு கேட்டிருக்கலாம். தமிழர்களை மட்டும் சாதியவாதிகள் போல முத்திரைக் குத்தும் கேவலமான ஒரு அரசியலை தெலுங்கர்கள் செவ்வனே செய்வார்கள். “நீங்கள் எந்தக்குடியைச் சார்ந்த தமிழர்?” என்று தமிழர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் கேளுங்கள் … “ என்று அப்பட்டமான சாதிவெறித்திமிருக்கு தமிழ்ச்சாயம் பூசியிருக்கும் பாரிசாலனின் கருத்துகளும் கடும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
— இளங்கதிர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.