கடவுள் படத்திற்கு பதிலாக பெரியார் படம் – மண்டையை உடைத்த பிஜேபி !
என் ஏரியாவில் பெரியார் படமா ? டிபன் கடைக்காரரின் மண்டையை உடைத்த பாஜக பிரமுகர் !
திருச்சியில் டிபன் கடை ஒன்றில் தந்தை பெரியாரின் படத்தை அப்புறப்படுத்துமாறு, பாஜக நிர்வாகி ஒருவர் தகராறில் ஈடுபட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி, பாலக்கரை, காஜாப்பேட்டையில் கடந்த 38 ஆண்டுகளாக டிபன் கடை நடத்தி வருபவர் 61 வயதான செல்வகுமார். இவரது கடைக்கு கடந்த மே-16 ஆம் தேதி இரவு 11 மணிக்கு சாப்பிட வந்திருக்கிறார், பாரதிநகரைச் சேர்ந்த சேகர் (எ) சாய்ராம் சேகர். அப்போது, டிபன் கடையில் மாட்டப்பட்டிருந்த பெரியார் படத்தை அகற்றுமாறு, அதிகாரமாக மிரட்டியிருக்கிறார் சேகர்.

ஒருகட்டத்தில், அங்கிருந்த ஹாட்கேஸ் ஒன்றை எடுத்து, டிபன் கடை உரிமையாளர் செல்வகுமார் மண்டையில் ஓங்கி அடிக்க மண்டை உடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செல்வக்குமார். 5 தையல் போடப்பட்டு, மூன்று நாட்கள் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த பாலக்கரை போலீசார், சேகரை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.
“சேகர் எங்க கடைக்கு வர்ற ரெகுலர் கஸ்டமர்தான். முன்பு தேமுதிகவில் இருந்தார். இப்போ பிஜேபியில பொறுப்புல இருக்காரு. அன்னைக்கு ராத்திரி வந்தவரு, என் ஏரியாவில் பெரியார் படம் இருக்கக்கூடாது கழட்டுனு சொன்னாரு.
நானும், ரெகுலர் கஸ்டமாராச்சே, போதையில் வேற இருக்காருனு நாளைக்கு காலையில கழட்டிடுறேனு சொன்னேன். சொல்றேன் கேட்க மாட்டியா? பெரியார் படத்த மட்டுமல் கழட்டுலனா கொண்ணேபுடுவேன்னு சொல்லிகிட்டே, பெரியார் படத்தை கழட்டப்போனாரு. நான் தடுத்தேன்.
அப்போதான், பக்கத்துல இருந்த ஹாட்கேஸ எடுத்து மண்டையிலேயே அடிச்சிட்டாரு. அப்போதைக்கு பக்கத்துல இருந்த என் மருமகன் குணசீலன் உதவியோட திருச்சி ஜி.எச்.ல சேர்ந்தேன்.”

“நான் எந்தக் கட்சியிலயும் இல்லைங்க. தி.க.காரனும் கிடையாது. தனிப்பட்ட முறையில எனக்கு பெரியாரை பிடிக்கும். இந்த கடையை 40 வருஷமாக நடத்திட்டு வரேன். 38 வருஷமா, பெரியார் படம் இங்கேதான் இருக்கு. இதுவரைக்கும் இப்படி நடந்தது இல்ல. இந்த பிரச்சினைக்கு அப்புறம், திமுகவில இருந்து, திராவிடர் கழகத்தில இருந்து வந்தாங்க. நாங்க இருக்கோம். நீங்க தைரியமா கடையை நடத்துங்கனு சொன்னாங்க…” என்கிறார், செல்வகுமார்.
“சம்பவம் பத்தி கேள்விபட்ட உடனேயே செல்வகுமாரை சந்தித்து பேசினேன். நீங்க தைரியமாக மீண்டும் கடையை திறங்க என்றோம். நாங்க ஒரு பத்து பேரு ஒன்னா சேர்ந்து போயிட்டு, கடையில மாட்டியிருந்த பெரியார் சிலைக்கு சந்தன மாலை போட்டுட்டு, ஒரு அரை மணி நேரம் கடையில பாதுகாப்புக்கு இருந்துட்டுதான் வந்தோம்.” என்கிறார், திமுகவின் மாவட்ட துணை செயலர் மூக்கன்.
61 வயதான செல்வகுமார் எந்தக் கட்சியும், அமைப்பையும் சார்ந்து இல்லாத போதும், கடையில் கடவுள் படத்திற்கு பதிலாக பெரியார் படத்தை வைத்திருக்கிறார். பெரியார் மண் இது என்று பலரும் மார்தட்டிக்கொள்வதற்கு அடிப்படையே கண்ணுக்கு தெரியாமல் கடந்துபோகும் செல்வகுமார் போன்றவர்கள்தான்.
இதற்கு முன்னர், கடந்த 2022 ஆம் ஆண்டில் கோவை காரமடையில் ”பெரியார் உணவகம்” என்ற பெயரில் புதிதாக உணவகம் திறந்ததற்காக, கடையை அடித்து நொறுக்கியிருந்தார்கள் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். அந்த விவகாரத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்திருந்தார்கள். தற்போது, திருச்சியில் அதே பாணியில் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.
இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே நடைபெற்றதாக, கேள்விபட்டிருக்கும் சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கும் விவகாரம் மட்டுமல்ல; தமிழகம் விழிப்புடன் இருந்தாக வேண்டுமென்ற எச்சரிக்கையும்கூட!
இளங்கதிர்.