கவிஞர் ஜெயதேவன்… காற்றிலே கலந்து விட்டார்….
கவிஞர் ஜெயதேவன் 11.06.2025 புதன்கிழமை இரவு காற்றிலே கலந்து விட்டார். அவர் உயிர் பிரிகின்ற சில மணி நேரங்கள் முன்பு வரைக்குமாக முகநூலில் தன் பதிவுகளைக்குரல் வழி எழுத்துப் பதிவுகளாக உயிர்ப்புடன் உருமாற்றிக் கொண்டிருந்தவர். இந்தப் பதிவில் உள்ள புகைப்படம் கவிஞர் ஜெயதேவன் முகநூலுக்கு வந்து நுழைந்த போது முதன்முதலாகப் பதிவிட்ட அவரது புகைப்படம்.
அவர் இயற்கை எய்தும் முன்பாக பதிவிட்ட இரண்டு பதிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஒன்று கவிஞர் அம்பிகா குமரன் அவர்களின் வேர்ல் பதிப்பக செயல்பாடுகள் குறித்து மனந்திறந்து பாராட்டியது. இன்னொன்று தமிழக மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சண்முகம் அவர்களின் திமுக அரசின் செயல்பாடு மற்றும் கூட்டணி குறித்து அபத்தமான பேச்சு பற்றியதாக “அவசரப்படாதீர் சண்முகம்” எனும் தலைப்பிட்ட அரசியல் பதிவு.
கவிதை, கலை, இலக்கியம், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் முகநூல் பதிவுகள் சார்ந்து அதிலும் சுறுசுறுப்பாக எப்போதும்
சுற்றுச் சுழன்று இயங்கியவர். அவரது சில பதிவுகளுக்கு எப்போதாவது (தேவைப்படும் நேரங்களில்) எதிர்வினை ஆற்றும் எழுத்தாளர் மாலன் போன்றோரின் கருத்துகள் மீதாகவும் கரிசனம் காட்டியவர். முகநூல் பதிவுகளை தனித்துவமான நனி நாகரிகமாகக் கையாண்டவர்.
ஆழ்ந்த இரங்கல்… கவிஞர் ஜெயதேவன்.
— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு, உழைக்கும் மூத்த பத்திரிகையாளர்.