சஸ்பெண்ட் தண்டனையா ? கூட்டுப்பாலியல் புகாரில் சிக்கிய போலீசாரை “டிஸ்மிஸ்” செய்யனும் !
சாமி தரிசனத்துக்காக தமிழகத்துக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை, தமிழக போலீசார் இருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீப காலமாகவே, திருவண்ணாமலைக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில பக்தர்கள் பெருமளவில் வந்து செல்கிறார்கள். பௌர்ணமி நாட்களில் சுமார் 5 இலட்சம் பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்று வந்த நிலையில், தற்போது வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் பல்லாயிரக்கணக்கான ஆந்திரா பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கியிருக்கின்றனர்.
அதுபோலத்தான், கடந்த செப்-19 அன்று, ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை மார்க்கெட்டுக்கு வாழைத்தார் ஏற்றி வந்த மினி லாரியில் இரு பெண்கள் பயணித்திருக்கிறார்கள்.
அப்போது, வாகனத்தை வழிமறித்த திருவண்ணாமலை நகர கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் காவலர்கள் சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோர் சோதனை என்ற பெயரில், வாழைத்தார் நடுவில் உறங்கிக் கொண்டிருந்த ஆந்திரா பெண்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.
பின்னர், வாழைத்தார் வண்டியை மார்கெட்டில் இறக்கிவிட்டு மீண்டும் ஆந்திராவுக்கு புறப்பட்டு வரும்போது, இரு பெண்களை அழைத்துச் செல்லுமாறும் அதுவரை இரு பெண்களும் இங்கேதான் இருப்பார்கள் எனக் கூறி வாழைத்தார் ஏற்றிவந்த வாகன ஓட்டுநரை மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள்.
அதன்பிறகு இரு பெண்களையும் கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி , விழுப்புரம் செல்லும் புதிய பைபாஸ் சாலையில் உள்ள ஏந்தல் என்ற பகுதியில், ஆளில்லாத அடர்ந்த வனப்பகுதிக்கு நீண்ட தூரமாக இழுத்துச் சென்ற அந்த காவலர்கள், இளம்பெண்ணை தாயின் (சித்தி) கண் முன்னே கொடூரமாக கூட்டு பாலியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அப்போது, மகளின் அலறல் சத்தம் கேட்ட (சித்தி ) அம்மா, அங்கிருந்து கூச்சலிட்டபடி ரோட்டிற்கு ஓடிச்சென்று , அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததை கூறியுள்ளார் . பொதுமக்கள் ஓடி வருவதை அறிந்த, அந்த காம வெறி காவலர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான, இளம் பெண் மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்டு ஆட்டோ உதவியோடு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்த சம்பவம் குறித்து , பாதிக்கப்பட்ட பெண்ணோடு வந்த (சித்தி) அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை நகர மகளிர் காவர்கள் , பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய போலீஸ்காரர்கள் சுரேஷ் ராஜ், மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைக்குப்பிறகு சிறையிலடைத்தனர்.
தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு சம்பவ இடத்திலும் நேரில் ஆய்வு நடத்தினர்.
பாலியல் அத்துமீறலில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். எடப்பாடி உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்று வேலியே பயிரை மேயும் கதையாக, நடத்தை மீறலில் ஈடுபடும் போலீசார்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் எழுந்திருக்கிறது.
— மணிகண்டன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.