சமையல் குறிப்பு: மட்டன் கறி உருண்டை குழம்பு!
வணக்கம் சமையலறை தோழிகளே! மட்டனை வைத்து நாம் பலவிதமாக குழம்பு வறுவல் என செய்திருப்போம். அதில், மட்டன் கோலா உருண்டை பலரின் விருப்பமான உணவாகும். அதிலும் இப்படி ஒரு மட்டன் கோலா உருண்டை குழம்பு ஒருமுறை செய்து பாருங்க அட்டகாசமாக வேற லெவலில் இருக்கும். இன்னைக்கு மட்டனை வைத்து ஒரு கறி உருண்டை குழம்பு செய்றது எப்படின்னு பாக்கலாம் வாங்க.
உருண்டை செய்ய:-
கொத்திய ஆட்டுக்கறி 250 கிராம், பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், சோம்புத்தூள் அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு 2 டீஸ்பூன், முட்டை 1, பச்சை மிளகாய் 2 (நீளவாக்கில் நறுக்கியது) பூண்டு 4 பல், உப்பு தேவைக்கேற்ப, என்னை பொறிக்க.
குழம்பு செய்ய:-
பெரிய வெங்காயம் 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன், பெரிய தக்காளி 2, சாம்பார் மிளகாய் தூள் 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2 நறுக்கியது, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், புதினா இலை கால் கப், தேங்காய் பால் 1 கப், கொத்தமல்லி இலை கால் கப், கிராம்பு 3, பட்டை ஒரு துண்டு, பிரியாணி இலை 2, ஏலக்காய் 2.
செய்முறை:- (உருண்டை தயாரிக்க)
ஆட்டுக்கறியை சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் பூண்டு நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். பின் மஞ்சள் தூள், சோம்புத் தூள், உப்பு பொட்டுக்கடலை மாவு மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.
குழம்பு தயார் செய்ய:-
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சாம்பார் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி வதக்கவும். மசாலா பொருட்கள் நன்றாக வதங்கியதும் தேங்காய் பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். கொதித்ததும் பொறித்த கோலா உருண்டைகளை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மட்டன் கறி உருண்டை குழம்பு ரெடி!
-பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.