திருமண வரமருளும் “சீதா கல்யாண” மகோத்சவம் ! ஜோலார்பேட்டை ‘ஶ்ரீ வீர ஆஞ்சநேயர்’ கோயிலில் கோலாகலம் !
கடந்த ஏப்ரல் 6-ந் தேதி அன்று தொடங்கிய ராமநவமி உற்சவத்தின் முத்தாய்ப்பான வைபவமாக கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதியன்று சீதா கல்யாணம் நடைபெற்றது.
ஶ்ரீராமநவமி – ராம பக்தர்களின் மனம் மகிழும் நாள். ராமாவதாரம் நிகழ்ந்த அற்புத தினம். இந்த நாளில் ஆலயங்களில் ஶ்ரீராமருக்குப் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பல ஊர்களில் சீதா கல்யாண வைபோகம் நடக்கும். அவ்வாறு சீதா கல்யாணம் நடைபெறும் கோயில்குக்கு சென்று திருக்கல்யாணத்தை தரிசிப்பது மிகவும் புண்ணியம் தரும் செயல் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள அம்மையப்பன் நகரில் எழுந்தருளியுள்ள “வீர ஆஞ்சநேய, சீதாராமர் கோயிலில் ” கடந்த –ஏப்ரல் 6 ஆம் தேதி ராமநவமியன்று கணபதி நவகிரஹ ஹோமம் மற்றும் சீதாராம வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் ஆகியவை நடந்தன.
ராமநவமி தொடங்கி தினமும் காலையில் வேத பாராயணம் மற்றும் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல, மாலையில் விஷ்ணுஸஹஸ்ர நாம பாராயணம் மற்றும் லட்சார்ச்சனை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன. “சீதா திருக்கல்யாணத்தையொட்டி கடந்த 18- ஆம் தேதி ‘சீதா ராமர்’ திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சீதா கல்யாணத்தையொட்டி ‘ஜோலார்பேட்டை’ அம்மையப்பன் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆலயத்தின் நுழைவுவாயில் வாழைமரத் தோரணங்களால் அலங்கரிப்பட்டிருந்தது. ராமர் பட்டாபிஷேக உற்சவர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னால் மக்கள் சீர் வரிசைகளுடன் வந்தனர். மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என, இருதரப்பினர் , ராமனை மகனாகவும் . சீதாதேவியை மகளாகவும் பாவித்து, பக்தி பரவசத்தில் திளைத்தனர்.
முன்னதாக 18-ஆம் தேதி அதிகாலை ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய உற்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின் திருமண வைபவச் சடங்குகள் நடைபெற்றன. கன்னிகாதானம், சூர்ணிகை, பிரவரம் ஆகிய வாத்தியங்களில் வாசிக்கப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றது.
இங்கு நடைபெற்ற இந்த தெய்வத் திருமண வைபவங்களில் கலந்துகொண்டதால் , பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும். திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். பட்டாபிஷேகக் கோலத்தில் இருக்கும் சீதையையும் ராமரையும் தரிசிக்க, காரிய ஸித்தியும், செல்வ வளமும் சேரும் என்று நம்புகிறோம். பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த சீதா கல்யாண மகோத்சவத்தில் கலந்துகொண்டு ஏக பயன்பெற்றுள்ளோம் என்றார்கள் திருக்கல்யாண வைபோகத்தில் கலந்துகொண்டோர்.
”ஶ்ரீராமநவமி திதிகளில் நவமியை சிறப்பிக்க நிகழ்ந்த அவதாரம் ராமாவதாரம். சகல நன்மைகளையும் தரும் ஸ்தோத்திரம் விஷ்ணு சகஸ்ரநாமம் என்பார்கள். அந்த விஷ்ணு சகஸ்ரநாமம் முழுமையையும் பாராயணம் செய்ய முடியாதவர்கள், “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராணணே” என்னும் இரண்டு வரிகளை மட்டுமே சொன்னால் போதும் முழு விஷ்ணு சகஸ்ரநாமமும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இதுவே ராமநாமத்தின் மகிமை ‘ராம’ என்னும் இரண்டெழுத்து மந்திரத்தைச் சொன்னாலே சகல பாவங்களும் தீரும் என்பார்கள். இத்தனை மகத்துவங்கள் நிறைந்த ‘ராம’ என்னும் நாமம் தோன்றக் காரணமாக இருந்த ஶ்ரீ ராமரின் அவதார தினம் ஶ்ரீராம நவமி. இந்த நாளில் வழிபாடு ஶ்ரீராமரை சீதா, லட்சுமண, அனுமத் சமேதராக வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.
பொதுவாகவே திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது, ‘சீதா கல்யாண வைபோகமே ! என்று பாடுவதைக் கேட்டிருப்போம். அந்த அளவுக்கு அதிமங்கலகரமான நிகழ்வாக “சீதா ராமர்” திருமணம் குறிப்பிடப்படுகிறது. சீதாதேவி மகாலட்சுமியின் அம்சம். ஶ்ரீராமரோ மகாவிஷ்ணுவின் அம்சம். இவர்களின் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்வது மிகவும் பாக்கியம். பல யுகங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த திருக்கல்யாண வைபவத்தை ஆலயங்களிலும் வீடுகளிலும் பஜனைகளிலும் பக்தர்கள் மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஜீவாத்மாக்களாகிய நமக்கு பரமாத்மாவான அந்தப் பரந்தாமனுடன் சம்பந்தம் வலுப்பட்டு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாகத் திருமண வரம் வேண்டுவோர், “சீதா ராமர்” திருமண வைபவத்தை தரிசனம் செய்தால் விரைவில் மணமாலை தேடிவரும் என்பது நம்பிக்கை” என்கிறார், இன்ஜினியர் Excel குமரேசன்.–
— மணிகண்டன்.