சமையல் குறிப்பு- ஸ்பெஷல் மசாலா முப்பருப்பு வடை!
வணக்கம் சமையலறை தோழிகளே! நாம் வழக்கமாக செய்யும் வடையை செய்யாமல் ஒரு முறை நான் சொல்வது போல் மூன்று விதமான பருப்புகளை கொண்டு அருமையான மசாலா பருப்பு வடையை செய்து பாருங்கள், சுவை அள்ளும். சரி இதை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு 1 கப், கடலைப்பருப்பு 1 1/4 கப், வடை பருப்பு 2 கப், காஷ்மீர் வரமிளகாய் 1, வரமிளகாய் 2, பூண்டு 2 பல், பட்டை ஒரு சிறிய துண்டு, கிராம்பு 1, பெருங்காயம் ஒரு சிட்டிகை, சோம்பு 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, உப்பு தேவையான அளவு, பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி புதினா ஒரு கப், பீட்ரூட் அரை கப் துருவியது, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
முதலில் 3 பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், மிக்ஸி ஜாரில் காஷ்மீர் வரமிளகாய், பூண்டு, பட்டை, கிராம்பு, வரமிளகாய், பெருங்காயத்தூள், சோம்பு கருவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஊற வைத்த பருப்புகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி புதினா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதன் பின் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.

அதன் பின் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அதில் வடை பதத்தில் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும். இப்போது சுவையான ஸ்பெஷல் மசாலா முப்பருப்பு வடை ருசிக்க தயார். சுவைத்து மகிழுங்கள்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.