சிறு கீரை தேங்காய்பால் கூட்டு! சமையல் குறிப்பு – 57
வணக்கம் சமையலறை தோழிகளே! தினமும் ஒரு கீரை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது.சுடச்சுட சாதத்தில் சிறுகீரை கூட்டு குழம்பு ஊற்றி அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டு பாருங்க சுவை பிரமாதம்… வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் சிறு கீரை தேங்காய் பால் கூட்டு.
தேவையான பொருட்கள்:
2 கப் தேங்காய் பால், 1 கட்டு சிறு கீரை, 1/2 கப் நறுக்கிய சாம்பார் வெங்காயம்,கல் உப்பு தேவையான அளவு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
கீரை தேங்காய்பால் கூட்டு செய்ய தேவையான பொருட்கள் எடுத்து தயாராக வைக்கவும்.கீரையை தண்ணீரில் இரண்டு,மூன்று முறை நன்கு கழுவி எடுத்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.தேங்காய் பால் எடுத்து தயாராக வைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு சேர்த்து பொரிந்ததும்,நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அத்துடன் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்னர் கல் உப்பு சேர்த்து கலந்து விடவும். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.கீரையில் உள்ள தண்ணீர் வற்றும் போது தயாராக வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொஞ்சம் சூடானதும் இறக்கி விடவும்.
குறிப்பு:
கெட்டியான முதல் தேங்காய் பால் மட்டும் தான் ஊற வேண்டும். தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடக்கூடாது.தயாரான கீரை கூட்டை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிக மிக சுவையான கீரை தேங்காய்பால் கூட்டு தயார்.சத்துக்கள் நிறைந்த,மசாலா பொருட்களை சேர்க்காத, மிகவும் சுவையான கீரை தேங்காய்பால் கூட்டு சுவைக்கத் தயார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த கீரை தேங்காய்பால் கூட்டு எல்லா சாதங்களுடனும் சேர்த்து சுவைக்கலாம்.
— பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.