மாபெரும் சிறப்பு “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு !
சாத்தூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் ஒரு பகுதியாக, படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகளிர் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய நல மருத்துவம், நரம்பியல், தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் நலம், காது–மூக்கு–தொண்டை, மன நலம், முடங்கியல், நுண்கதிர், நுரையீரல், சர்க்கரை நோய் மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட 17 துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி. உள்ளிட்ட ரூ.3,000 மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பயனாளிகள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு நகலுடன் முகாமில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, கோட்டாட்சியர் கனகராஜ், தாசில்தார் ராஜாமணி, நகர மன்ற தலைவர் குருசாமி, முன்னாள் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், மாவட்ட சுகாதார அலுவலர், வட்டார சுகாதார அலுவலர் ஜெகவீரபாண்டியன், அலெக்ஸ் குணசேகரன், அலுவலர் ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமின் நிறைவில் உரையாற்றிய தேசிய அமைச்சர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி அனைத்து துறைகளிலும் மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ போன்ற மருத்துவ முகாம்கள் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருகிறது” என தெரிவித்தார்.
இந்த மருத்துவ முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அரசின் மக்கள் நல திட்டங்கள் நேரடியாக மக்களிடம் சென்றடைந்துள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.