கூட இருந்தே குழிபறித்த உத்தமர்கள்! நாங்கள் ஏமாந்த கதை : பாகம் – 03
நான் கவனக்குறைவாக முள்ளின் மீது காலை வைத்துவிட்டேன்” என்று யாரும் அவ்வளவு வெளிப்படையாக சொல்லி விடுவதில்லை. “முள் குத்திவிட்டது” என்றுதான் சொல்லிப் பழகியிருக்கிறோம். அவ்வாறே பழக்கப்படுத்தப்பட்டும் இருக்கிறோம்.
அதுபோலத்தான். ”அவனது பேச்சை நம்பி, நான் ஏமாந்துவிட்டேன். நான் ஏமாந்து போனேன்.” என்று யாரும் சொல்வதில்லை. “அவன் என்னை ஏமாற்றிவிட்டான். என்னை மூளைச் சலவை செய்துவிட்டான்.” என்றுதான் சொல்கிறோம்.
யார் ஒருவரும் என்னதான் மூளைச்சலவை செய்தாலும், நமக்கு தனிப்பட்ட ஆதாயமில்லாத ஒன்றை, நாம் விரும்பத்தகாத ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்திவிட முடியுமா? அதுபோன்றதொரு முன்னுதாரணத்தை யாராலும் சுட்டிக்காட்ட இயலுமா? இங்கே எந்த இடத்தில் நாம் வீழ்ந்தோம் என்பதை மீளாய்வு செய்வதற்கான மனப்பக்குவத்தைக்கூட இழந்துதான் நிற்கிறார்கள் ஏமாந்த பலரும்.
தெரியாத நபர்களை நம்பி, முன்பின் தெரியாத கம்பெனிகளை நம்பி யாரும் இதுவரை மோசம் போனதாக வரலாறு இல்லை. பெரும்பாலும் உள்ளூர்க்காரர், நம்ம முனை கடை செட்டியார், நம்ம சித்தப்பா, நம்ம மாமா சொல்றார்னு அவர்களை நம்பி பணம் போட்டேன் என்பது போன்ற நம்பிக்கைதான் இங்கே அடிப்படையாக இருக்கிறது. அவர்கள் சொல்லும் கம்பெனியின் பெயர் இதுவரை அறியாததாக இருக்கலாம், ஆனால் அந்த கம்பெனியின் சார்பில் கம்பிக்கட்டும் கதைகளை அவிழ்த்து விட்டவர் நிச்சயம் நமக்குத் தெரிந்தவராகத்தான் இருந்திருக்க முடியும். அவரை நம்பித்தான், அவரது பேச்சை நம்பித்தான் பலரும் பணத்தை முதலீடு செய்து பின்னர் ஏமாந்து போயிருக்கிறார்கள்.

பி.ஏ.சி.எல். என்ற கம்பெனியின் கதை என்ன? பி.ஏ.சி.எல். என்றால் யாருக்குத் தெரியும்? அதை பட்டிக்காட்டில்கூட பிரபலப்படுத்தியது யார்? எல்.ஐ.சி. மாதிரி இதுவும் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி என்று பிரச்சாரம் செய்தது யார்? எல்.ஐ.சி.யைவிட கூடுதலாக, இதில் கமிஷன் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு பலரையும் இழுத்துப்போட்ட அந்த ஏஜெண்டுகள் தானே? இன்று அவர்களை கேள்வி கேட்க முடியுமா? எல்.ஐ.சி.யில் போட வேண்டிய பாலிசியை பி.ஏ.சி.எல்.-க்கு மடைமாற்றி முதலீடு செய்ய வைத்த ஏஜெண்ட் அதற்கான கமிஷனை வாங்கிவிட்டார். போட்ட முதலீட்டை திரும்பப்பெற முடியாமல் முதலீட்டாளர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா மோசடி கம்பெனிகளுக்கும் பொருந்தும் பொது நியதியாக இருக்கிறது.
”ஒருத்தன ஏமாத்தணும்னா, அவன் ஆசைய தூண்டனும்” என்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த ஒற்றை வசனம்தான், மோசடிக்காரர்களின் வேத மந்திரமாகவே இருக்கிறது. இப்படியெல்லாம் கூட மோசடி செய்ய முடியுமா? என்று வாயைப் பிளக்க வைக்கிறது மோசடிகளின் பல்வேறு பரிமாணங்கள். மோசடிகளை வகைப்படுத்துவதிலேயே அவ்வளவு குழப்பம் இருக்கிறது. உள்ளூர் அளவில் தீபாவளி பண்டு பிடித்த கதை தொடங்கி, ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டு உலகளாவிய இரிடியம் பிசினஸ் வரையில் எல்லைகள் கடந்த கற்பணைக்கு எட்டாத அமானுஷ்ய காட்சிகளாக விரிகின்றன மோசடிக்கதைகள்.
தொடர்ந்து பேசலாம் …
— வே.தினகரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.