வெற்றிப்( பஸ்)படிக்கட்டை விரட்டி பிடித்த மாணவி சுஹாசினி !
தேர்வு நாளன்று நிற்காமல் சென்ற அரசு பேருந்தை , பின் தொடர்ந்து ஓடிய மாணவி சுஹாசினி 437 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் +2 மாணவி சுஹாசினி. இவர் கடந்த மார்ச் 25 ஆம் தேதி இயற்பியல் தேர்வு எழுத ஆலங்காயம் செல்வதற்காக கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் மாணவி சுஹாசினி உயிரை பணயம் வைத்து பேருந்தின் படிக்கட்டு கைப்பிடியை பிடித்தபடி தொடர்ந்து ஓடினார்.
மாணவி சுஹாசினி
சில 100 மீட்டர் தூரம் ஓடிய பேருந்து வேகத்தடையில் நின்ற பின்னா், பேருந்தில் ஏறி தேர்வு எழுத சென்றார். இந்த வீடியோ காட்சி வெளியானதை தொடர்ந்து ஓட்டுநர் முனி ராஜ் மற்றும் நடத்துநர் அசோக் ஆகியோரை வாணியம்பாடி போக்குவரத்து பணிமனை அதிகாரி பணியிடை நீக்கம் செய்தார்.
அதனைத்தொடர்ந்து ” “மாணவியை ஓடவிட்ட பேருந்து நடத்துநர்… ஓட்டுனரை வீட்டுக்கு ஓடவிட்ட பணிமனை அதிகாரி…” என்ற தலைப்பில் அங்குசம் சேனலில் செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில் , நேற்று +2 பொது தேர்வு முடிவுகள் வெளியானது பேருந்தை விரட்டி பிடித்த அன்று , மாணவி சுஹாசினி எழுதிய இயற்பியல் பாடத் தேர்வில் 61 மதிப்பெண் பெற்றதோடு , 437 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். எங்கள் சுஹாசினி உயிரை பணயம் வைத்து பிடித்தது பஸ்( வெற்றிப்) படிக்கட்டைதான் என்று அப்பகுதி மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.
— மணிகண்டன்.