மனு போட்டு வருஷம் ஒன்னாச்சு … எப்போ சார் வருவீங்க ? சர்வேயர் பற்றாக்குறை ! அவதியில் மக்கள் !
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவது இயல்பான ஒன்று. மக்களுடன் நேரடி தொடர்பில் எப்போதும் இருக்கக்கூடிய ஒரு துறை வருவாய்த்துறை. பல்வேறு கோரிக்கைகளுடன் மக்கள் அன்றாடம் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு படையெடுத்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். வருவாய்த்துறையில், குறிப்பாக சர்வேயர்கள் பற்றாக்குறை தமிழகம் முழுவதும் தீராத சிக்கலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மாவட்டத்தில் 10 தாலுகாக்களும் (வட்டம்) 47 பிர்க்காக்களும் (குறுவட்டம்) இருக்கின்றன. இதன்படி, திருவையாறு தாலுகாவில் 3 பிர்கா; ஒரத்தநாடு தாலுகாவில் 8 பிர்கா; பூதலூர் தாலுகாவில் 4 பிர்கா; திருவோணம் தாலுகாவில் 4 பிர்கா; பேராவூரணி தாலுகாவில் 4 பிர்கா; திருவிடைமரூதூர் தாலுகாவில் 5 பிர்கா; பாபநாசம் தாலுகாவில் 6 பிர்கா; தஞ்சாவூர் தாலுகாவில் 5 பிர்கா; கும்பகோணம் தாலுகாவில் 5 பிர்கா; பட்டுக்கோட்டை தாலுகாவில் 3 பிர்காக்கள் இருந்து வருகின்றன. ஆக மொத்தம் பிர்கா ஒன்றிற்கு ஒரு சர்வேயர் வீதம் 47 சர்வேயர்கள் இருக்க வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உதாரணமாக, பூதலூரில் தாலுகாவில் 4 சர்வேயர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சர்வேயர் மட்டுமே இருக்கிறார். இதுபோலத்தான் மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் சர்வேயர் பற்றாக்குறை நிலவிவருகிறது. இதன் காரணமாக, இடப்பிரச்சினை தொடர்பாக, தங்களது நிலங்களை அளந்து அத்துக்காட்டுமாறு கோரிக்கைகளுடன் பலர் விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய அவலம் நிலவுகிறது. பலர் விண்ணப்பித்து ஓராண்டாகியும் இன்னும் அளக்கப்படவில்லை என்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். பொதுமக்களும் வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டுதானிருக்கிறார்கள். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குறிப்பாக வருவாய்த்துறை அமைச்சர் தலையிட்டு, சர்வேயர் பற்றாக்குறை சிக்கலுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
— தஞ்சை க.நடராஜன்.