எல்லாமே நாங்கதான் … உன்னால முடிஞ்சத பாரு ! – சொந்த கட்சி கவுன்சிலருக்கே கொலை மிரட்டல் விடுத்த சேர்மன் குடும்பம் !
உள்ளாட்சி அமைப்புகளில் சாதிவாரியான பிரதிநிதித்துவத்தோடு, பெண்களின் பங்கேற்பையும் உத்தரவாதப்படுத்த வேண்டுமென்ற நோக்கில்தான், பெண்களுக்கான ஒதுக்கீடு முறைகளும் நடைமுறைக்கு வந்தன. ஆனாலும், பெயருக்குத்தான் பெண்கள் போட்டியிடுவது; மற்றபடி, அவர் சார்பில் அவரது கணவரோ, தந்தையோ, சகோதரரோதான் நிர்வாகங்களை மேற்கொள்வது என்பதாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்து வரும் நிலையில், திருப்பத்தூர் நகராட்சியிலும் பிரதிபலித்திருக்கிறது.
திருப்பத்தூர் நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்னவோ, திமுகவை சேர்ந்த சங்கீதா. ஆனால், சேர்மனாக செய்ய வேண்டிய வேலைகள் அத்தனையும் செய்வது என்னவோ, சங்கீதாவின் கணவர் வெங்கடேசனும், வெங்கடேசனின் சகோதரர் கார்த்திக்கும்தான்.

இன்னும் சொல்லப்போனால், சேர்மன் வேலையை மட்டுமல்ல; நகராட்சியின் காண்டிராக்டுகளையும் கார்த்திக்தான் கபளீகரம் செய்து வருகிறாராம். இது சொந்தக் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கே புகைச்சலாகவும் இருந்து வருகிறதாம்.
இந்நிலையில்தான், திமுகவை சேர்ந்தவரும் 15-வது வார்டு கவுன்சிலருமான மனோகரன் என்பவர், தனது ஏரியாவில் தனக்கே தெரியாமல் கல்வெட்டு அமைக்கும் பணியை மேற்கொண்ட கார்த்திக்கிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்கு, “உன்னிடம் எல்லாம் சொல்லிவிட்டு வேலையை தொடங்க வேண்டுமென்ற அவசியமில்லை” என்று எடுத்தெறிந்து பேசியதோடு, தனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார் என்பதாக குற்றஞ்சாட்டி நகராட்சி ஆணையருக்கு கைப்பட கடிதம் ஒன்றை புகாராக அனுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து, மனோகரனிடம் பேசினோம். ”நகராட்சியில் நடக்கும் பணிகளுக்கு பினாமி பெயரில் எடுக்கப்பட்ட காண்ட்ராக்ட்டுகளை சப் காண்ட்ராக்ட்டாக சேர்மேனின் கணவர் வெங்கடேசனின் அண்ணன் கார்த்திக் என்ற நபர் செய்து வருகிறார். அதேபோல் என்னுடைய 15-வது வார்டில் மழைநீர் வடிகால் அமைப்புக்காக 20 அடி அகலத்தில் “சிறுபாலம் கட்டும்” பணியையும் தொடங்கி பாதியில் விட்டுவிட்டு கொண்டு வந்த மணல் ஜல்லி கற்கள் போன்ற கட்டுமான பொருட்களை மற்றொரு வார்டில் நடக்கும் பணிகளுக்கு வாரிக் கொண்டு சென்றார்.

இது குறித்து ஏரியா கவுன்சிலரான என்னிடம் எந்த காரணத்தை சொல்லவில்லை. பணியை தொடங்கும் போதுகூட என்னை அழைக்கவில்லை. அப்பறம் எதுக்கு தம்பி கவுன்சிலரா நான் இருக்கனும்? நான் இந்த வார்டை பற்றி அறிந்தவன். இங்கு எந்த பணி செய்ய வேண்டும் என்று எனக்குத்தான் தெரியும். கட்டுமான பணி சரியில்லை என்றால், எங்க பகுதி மக்கள் யாரை கேட்பார்கள் ? என்றுதான் கேட்டேன்.
அதற்கு அவர், ”உங்கிட்ட எதுக்கு சொல்லனும், உனக்கெல்லாம் சொல்லவேண்டிய அவசியமில்லை.” என்று உதாசீனப்படுத்தி பேசினார். கவுன்சிலர் பதவிக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும் (65) வயதுக்கு மரியாதை கொடுக்காமல் மிக கீழ்தரமாக பேசுகிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சம்பவத்தன்று 10-ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனரிடம் புகாரளிக்க சென்றேன். எதிரே வந்த கார்த்திக், “உன் வார்டுல எந்த பணியும் நடக்கல. அப்படியே நடந்தாலும் உங்கிட்ட எதுக்கு சொல்லனும்? பார்க்கறியா உன்னை என்ன பன்னுவேனு தெரியாது” என் சமுதாயத்தை ( தலித்) சேரந்தவனாக இருப்பதால் விடுகிறேன். ‘இதே “வேறயாக இருந்தால்” நடந்திருப்பதே வேற என “கொலை மிரட்டல் விடுகிறார். அந்த இடத்தில் சக கவுன்சிலர் ஒருவரும் உடனிருந்தார். வாக்குவாதம் முற்றி கைகலப்பு நடந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிறார்.

புகாருக்குள்ளான கார்த்திக்கிடம் விளக்கம் பெற அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, “அண்ணன் சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். வந்த உடன் பேச சொல்கிறேன்” என்பதாக ஒருவர் பதிலளித்தார். அடுத்த முறை சேர்மன் ட்ரைவர் கிரன் பேசுகிறேன் என்றவர், “ அண்ணன் நான்கு மணிக்கு வந்துவிடுவார் உங்களிடம் பேசுவார்” என்றார். சேர்மன் சங்கீதாவிடம் விளக்கம் அறிய அவரது எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.
இதற்கிடையில், இது குறித்து மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவிடம் புகார் அளிக்க கவுன்சிலர்கள் தயாராக இருப்பதாக ஒரு தகவல். மேலும், பிப்-10 அன்று நகராட்சி அலுவலகத்தில் வாக்குவாதம் நடைபெற்றதற்கு ஆதாரமாக சிசிடிவி பதிவுகளை கேட்டும் நகராட்சி கமிஷனர் கொடுக்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் சக கவுன்சிலர்கள் தரப்பில் முன்வைக்கிறார்கள்.
ஆளும்கட்சி சேர்மன் குடும்பத்தினரால், ஆளும்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கே கொலை மிரட்டல் விடுத்திருப்பதான இந்த விவகாரம், திருப்பத்தூரில் அரசியல் சூட்டை கிளப்பியிருக்கிறது.
— மணிகண்டன்.