திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஆய்வு பணியில் எம்பி. கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற ஜூலை ஏழாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் (17/06/2025) திருச்செந்தூரில் நடைபெற்றது.
இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கு வரக்கூடிய பக்தர்கள் வாகனத்தை நிறுத்த வேண்டிய இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், குடமுழுக்கு விழாவிற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் சிவராசு, அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
— மணிபாரதி