இன்று ராமர் கடைக்கு வந்தார் …
இன்று ராமர் வேடத்தில் கடைக்கு ஒருவர் வந்தார், அவருடன் (selfie)தம்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென மனம் விரும்பியது.. அவரிடம் இசைவு பெற்று படம் எடுத்தேன், எனக்கு சிறுவயதிலிருந்தே வீதிகளில், கடை தெருக்களில், சந்தைகளில், நல்லத் தங்காள், அரிச்சந்திரன், மதுரை வீரன், ஆரியமாலா,போன்றபெருங்கதையாடல்கள், வரலாறுகளை, மேளம் தப்பு, போன்ற,ஏதோ ஒரு இசைக் கருவியை… (அந்த சிறிய வயதில் என்ன இசைக்கருவி என்று எனக்கு தெரியாது, ) வைத்துக்கொண்டு அந்தந்த பாத்திரமாகவே வேடம் அணிந்தும், வேடமணியாமலும், நாடகங்களை நடத்தி வருவாயை பெற்று பிழைப்பை, நடத்துவார்கள்..
இன்று இவர்களையெல்லாம் பார்க்க முடிவதில்லை, அப்பொழுதே இவர்களுடன் புகைப்படம் எடுக்க மனம் விரும்பும், பிறகு கொஞ்சம் நான் வளர்ந்த பிறகு இதுபோல் வீதிகளில் மேடைகளில் நடிக்கக்கூடிய சமூக நாடக கலைஞர்களிடமும், படம் எடுத்துக் கொள்ள மனம் விரும்பினாலும் கூச்ச சுபாவத்தால், சற்று ஒதுங்கி நின்று விடுவேன்.
படம் எடுப்பதற்கான சூழலையும் உருவாக்கிக் கொள்வதில்லை… ஏன் மனம் இவர்களுடன் மட்டும் படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறதெனயோசித்துப் பார்த்தால்.. ஒன்று புரிந்தது.. உண்மையில் இவர்களெல்லாம், வெளியே (புறத்தில்) எத்தனை வேடம் அணிந்தாலும், உள்ளே (அகத்தில்)நேயமிக்க, பாசம்நிறைந்த, மனித உறவுகளை பேணுகிற மாமனிதம், என்ற ஒற்றை வேடம் மட்டுமே அணிந்து வாழ்கிறவர்கள்.
நான் அன்றாடம் சந்திக்கிற மனிதர்களிடமும், உறவுகளிடமும், படம் எடுக்க மனம் விரும்புவதில்லையே ஏன் என்றும் யோசித்தும் பார்ப்பேன். அப்படி பார்த்தப்பொழுது, என் வாழ்வில் நான் சந்தித்த உடன் பிறந்த ரத்த உறவுகளிலும், இதுவரையுமான காலச் சூழலில் சந்தித்த, நட்பு, தொழில், இலக்கிய, அரசியல், உறவுகளிலும்சரி பலரும் தம் பிழைப்பை நடத்துவதற்காக, உள்ளே பல வேடம் அணிந்தும், வெளியே ஒரே வேடத்தோடு பசப்பிக் கொண்டு திரிபுவர்களிடம் படம் எடுக்க மனம் எப்படி விரும்பும்..
சரிதானே, இதை சென்ற ஆண்டு (2025) எனக்கு நிறையவே அடையாளப்படுத்திவிட்டு சென்று இருக்கிறது.
இவற்றைத் தான் வள்ளலார் “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்” என்று பாடி இருப்பார் ஏன்றே எனக்குத் தோன்றியது. காலம் உணர்த்தியதை இப்பொழுதாவது, அறிந்து கொண்டேனே, இனி புதிய தெம்மில் புதியவெளிச்சத்தில், புதிய பயணம் தொடர்கிறது…
— திருவைக்குமரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.