பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அவலம் !
பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அவலம். தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரங்கணி மலைப்பகுதியில் உள்ளது முதுவாக்குடி பழங்குடி கிராமம். கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தனித்த மொழி பண்பாடு உணவு பழக்க வழக்க உடையவர்கள் பல தலைமுறைகளாக காடுகளில் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தை சேர்ந்த வினோத் மனைவி முருகேஸ்வரி (வயது 26) 4 மாத கர்ப்பிணியாக இருந்த முருகேஸ்வரிக்கு நேற்று (20.2.2024) அதிகாலையில் கருச்சிதைவு ஏற்பட்டது. 4 மாத பெண் சிசு மலைக்கிராமத்திலேயே பிறந்து இறந்துள்ளது.
தொடர்ந்து அதிகப்படியான ரத்தப்போக்கு வெளியேறிய நிலையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வினோத் முயற்சித்தார். குரங்கணியில் தொலைத் தொடர்பு சேவைக் குறைபாடு உள்ளதால் அங்குள்ள ஜீப் டிரைவரை வினோத் தொடர்பு கொள்ள முயன்று முடியாததால் வாட்ஸ் அப் வழியாக குறுஞ்செய்தி அனுப்பி ஒரு வழியாக பகல் 11 மணிக்கு மேல் ஜீப் முதுவாக்குடிக்கு வந்ததுள்ளது.
மனைவியை சாலை வசதி இல்லாத வனப்பகுதியில் பயணித்து போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த டாக்டர்கள் முருகேஸ்வரியை மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பிரிவில் பெட் வசதி கொடுக்காமல் 1 மணி நேரத்துக்கும் மேல் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். பின்னர் முருகேஸ்வரி வேதனையுடன் சிகிச்சைப்பிரிவு படிக்கட்டில் காத்திருந்தார். அதன்பிறகு தேனி ஊடக நண்பர்கள் தலையிட்டதன் பேரில் பழங்குடி பெண் முருகேஸ்வரிக்கு பல மணி நேரம் கழித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த இந்த அவலம் வேறு யாருக்கும் இனிமேல் நேராமல் இருக்க வேண்டும். அகமண முறை, மற்றும் பண்பாட்டு பழக்க வழக்கங்களால் குழந்தையின்மையால் ஏற்கனவே அழிவின் விளிம்பில் உள்ள முதுவர் பழங்குடியினரை பாதுகாத்திட வேண்டும்.
* வனக்கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேரும் பழங்குடியினருக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
* கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவ பணியாளர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஆங்கிலேயர் காலத்தில் குரங்கணி முதுவாக்குடி கிராமத்திற்கு அமைக்கப்பட்ட சாலையை மேம்படுத்தி தரமான சாலையை ஏற்படுத்தி தர வேண்டும்.
ச.தனராஜ்
பழங்குடியினர் உரிமைக்கான செயல்பாட்டாளர்.
93613 30173.