“சும்மா இருங்க தம்பி” மாநிலங்களவையை அதிரவிட்ட திருச்சி சிவா!
வந்தே மாதரம் என்று பாஜக தேவையில்லாத ஆணியைப் பிடுங்கிய நேரத்தில் “ஜெய்ஹிந்த் செண்பகராமன் தெரியுமா?” என்று நாடாளுமன்ற மாநிலங்களவையை அதிரவிட்டிருக்கிறார் திமுக மாநிலங்களவை குழு தலைவர் அண்ணன் திருச்சி சிவா.
தமிழரான செண்பகராமன் பற்றி, திமுகவின் முதல் இளைஞரணி மாநாடு 2007 ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற போது முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதத் தொடரில் மிக விரிவாக பதிவு செய்திருப்பார். தினமணி கதிரில் ஜெய்ஹிந்த் செண்பக ராமன் குறித்து வெளியான தொடர் முக்கியமான ஒன்று.
தமிழ்நாட்டில் காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி, திலகர் பெயர்களில் தெருக்கள், பூங்காக்கள், மைதானங்கள் உள்ள நிலையில் தமிழர்கள் பெயர்களில் வட மாநிலங்களில் இடங்கள் உள்ளனவா? இவர்களைப் பற்றி சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் குறிப்புகள் உள்ளனவா? என்று திருச்சி சிவா அவர்கள் கேட்டதற்கு, பதில் அளிப்பதாக நினைத்துக் கொண்டு ஒன்றிய அரசின் இணை அமைச்சர் முருகன், காங்கிரஸ் ஆட்சியில் பெயர் வைத்தார்களா? என்று குறுக்கே விழுந்து புரண்டார்.
“சும்மா இருங்க தம்பி” என்று அமைச்சரை ஹேண்டில் செய்த அனுபவஸ்தரான திருச்சி சிவா, வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள மனப்பான்மையை சரியாக விளக்கி, இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார்.
திமுக நாடாளுமன்றத்தில் முதன் முதலாக நுழைந்த காலத்தில் இருந்தே தென்னிந்திய வரலாற்றுப் பங்களிப்பை ஒன்றிய அரசு மறைத்து வருவதை தொடர்ந்து சுட்டிக் காட்டியுள்ளது. வி பி.சிங் பிரதமராக இருந்தபோது பெரியார், அண்ணா பெயர்களை நாடாளுமன்றத்தில் உரக்க உச்சரித்தார். அப்போது எதிர்த்து கூவியவர்கள் தான் பாஜகவினர்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பிலான வாகனத்தில் வ.உ.சிதம்பரனார், வேலு நாச்சியார் உள்ளிட்டவர்கள் இடம் பெற்ற போது அதனை ஏற்காமல் அனுமதி மறுத்த அரசுதான் மோடியின் பாஜக அரசு.
அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இருக்கும் போது ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இந்தி சமஸ்கிருத பெயர்களை மட்டுமே வைத்து தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களை இழிவுபடுத்துவதும் பாஜக தான்.
பதவி சுகம் அனுபவிக்கும் முருகன்கள், அண்ணன் திருச்சி சிவாவிடம் உருண்டு புரள்வதை விட மோடி அமித்ஷாவிடம் புரள்வது நல்லது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.