வைதீகத் தீநெறி இந்துமதத்துக்கு எதிரான ஒரு விரிவான பேரவை வேண்டும்! – அரங்க. குணசேகரன்
தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் அரங்க. குணசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர் பன்னெறி என்பதன் பொருள் ஒரே ஒரு தமிழர் சமயத்தைக் குறித்தது இல்லை. தமிழர்கள் காலந்தோறும் பன்மைக் கலாச்சார பண்பாடு ஆன்மீகத்தை வாழ்க்கை முறையாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். தந்திரம் எண்ணியம் ஆசீவகம் சிறப்பியம் பௌத்தம் கிறித்துவம் முஸ்லீம் சிவம் வைணவம் கௌமாரம் வள்ளலாரியம் என பன்முக சமயக் கொள்கைகளைக் கொண்டு வாழ்ந்துவருகிறவர்களாக இருந்ததற்கு பல்வேறு இலக்கியச் சான்றுகள் நடைமுறை எதார்த்தங்களே சான்றுகளாக இருக்கின்றன.
பிரிட்டீசார் எப்போது நம் எல்லோரையும் இந்துத்துவக் கட்டுமானத்தின் கீழ் அடைத்து இந்து என்று அழைத்தார்களோ அன்று தொடங்கி வைதீகர்களும் வைதீகம் தத்துவங்களும் நம்மை ஆட்கொண்டு அடிமைப்படுத்துகின்றன. பிரித்துபிரித்து கலகம் விளைவித்து சதிராட்டம் ஆடி குருதி குடிக்கின்றன.

வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நிறைய கலாச்சார பண்பாட்டு வேறுபாடுகள் உண்டு. தென்னிந்தியாவிலேயே கூட தமிழ்நாட்டு சமயப்பொறை சகோதரப்பண்பாடு என்பாடு பன்னெடுங்கால வரலாறுகள் கொண்டது. நமது சேர பாண்டியர் வரலாறுகள் சிவ வைணவ கோவில்களை மட்டும் கட்டியவர்கள் இல்லை. அவர்கள் பல நூறு புத்தப் பள்ளிகளையும் முஸ்லீம் கிறித்துவ வழிபாட்டுத் தலங்களை கட்டுவிக்க உதவியும் வழிபாடுகளை ஆதரித்தும் உதவி செய்தனர். மன்னர்களுக்கும் அவர்களது காலத்து தமிழர் சமயக் கூட்டத்தார்க்கும் இந்து என்ற சொல்கூட தெரியாது.இப்படி ஒரு சொல்லை சமயத்தை பின்னாட்களில் பிரிட்டீசார் உருவாக்குவார்கள் என்றுகூட அவர்களுக்கு தெரியாது.
இன்றைய இந்துமதம் அனைத்தையும் செரித்துவிட்டு வைதீக கொள்கைகளை மட்டும் கொண்ட மதவெறியூட்டுகிறது.
பாபர் மசூதி இடித்து இராமர் கோவில் கட்டி ருசிகண்ட சங்கபரிவாரக் கும்பல் அரசியலையும் (ஆன்மீகத்தையும்) வைதீக வன்முறைக் கலாச்சாரத்தையும் ஒன்றிணைத்து தமிழ்நாட்டின் வீதிகளில் குருதி ஆற்றின்மீது குளித்து எழ நினைக்கிறது.
இதற்கு துணையாக நமது தமிழ்ச் சமூகத்தின் சாதிகளை சாதிச்சங்கங்களை தனித்தனியே அவரவர் பெருமிதங்களாக சில நச்சுக்கருத்துக்களை விதைத்து இந்துத்துவா நோக்கங்களுக்காக அறுவடை செய்கின்றனர். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபத்தூண் என்ற ஒரு கலவரத்தை தோற்றுவித்துள்ள கலகம். வைதீக இந்துமதம் உருவாவதற்கும் அல்லது தமிழ்நாட்டில் வருவதற்கும் முன்னும் பின்னும் தமிழர்கள் விளக்கீடு எனும் கார்த்திகை தீபமேற்றும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
அதில் இந்துத்துவத்தை வைதீக தீநெறியை திணித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் கலகத்தில் உள்ளூர் மக்கள் பங்கேற்கவில்லை.
தமிழர்களை வைதீக தீநெறிக் கலவரத்தில் தூண்டில் போட்டு தூரத்தில் இருந்து தூபம்போடும் பிராமணர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் வைதீக தீநெறிக்கு ஆதரவாக யூடூயூப் தொலைக்காட்சி பத்திரிக்கைகளில் காட்சிகொடுப்பதோடு நின்றுவிடுவார்கள்.
திருப்பரங்குன்றத்தில் முழுக்க முழுக்க வெளியூர்களிலிருந்து திரட்டப்பட்ட தமிழ்ச்சொந்தங்களையே வைதீக தீநெறிக் கும்பலாக கூட்டியுள்ளனர்.
தமிழ் நன்னெறிப் பன்முக சமயச் சகோதரர்களிடையேயும் மதம் சாராத சோசலிசக் கொள்கையினரிடையேயும் ஒருவலுவான சமுக சமத்துவ ஆன்மீக பேரவைத் தேவையைப் பரிந்துரை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.