விஜயதரணி பாஜகவில் – “எங்கிருந்தாலும் வாழ்க” – காங். தலைவர் செல்வப்பெருந்தகை !

0
விஜயதரணி -
விஜயதரணி –

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இணைந்தார் “எங்கிருந்தாலும் வாழ்க” – காங். தலைவர் செல்வப்பெருந்தகை . கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இணையப் போகிறார் என்று ஒருவாரக் காலம் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இடையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி,“நான் நெருப்பு…. என்னைப் பாஜக நெருங்கமுடியாது” என்று கூறிப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, இன்று (24.02.2024) பிற்பகலில் தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்று செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஜயதரணி கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்னும் தமிழின் சிறந்த கவிஞரின் கொள்ளுப்பேத்தி. 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் விஜயதரணியின் தாயார் பகவதி என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். சென்னை சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது மாணவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பின்னர்த் தன்னுடைய 25ஆம் வயதில் இளைஞர் காங்கிரஸ்-இல் தீவிரமாகச் செயல்பட்டார். இவருடைய கணவர் சிவகுமார் கென்னடி 2016ஆம் ஆண்டு இறந்துவிட்டார். விஜயதரணிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2011ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு மீண்டு விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது 68ஆயிரம் வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது. இதனால் தன் மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோபம் கொண்டிருந்தார் என்று விஜயதரணி குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் 28669 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றார்.

- Advertisement -

- Advertisement -

2016ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் அணியின் தலைவராக இருந்தார். தொடர்ந்து, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டார். தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுவின் தலைமை கொறடா (Whip) என்ற பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், பழுத்த காங்கிரஸ் குடும்பப் பின்னணி கொண்ட விஜயதரணி தற்போது பாஜகவில் இணைந்து தன்னைப் பற்றிய பரப்பப்பட்ட பரபரப்பான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

செல்வபெருந்தகை - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
செல்வபெருந்தகை – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

விஜயதரணி பாஜகவில் இணைந்தது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது,“விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் 3 வெற்றி பெற்றவர். காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் என்ற செய்தி அறிந்தேன். எங்கிருந்தாலும் சகோதரி விஜயதரணி வாழ்க” என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் பேசும்போது,“காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3 முறை விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வாய்ப்பைக் கொடுத்தது. மக்கள் தொடர்ந்து வெற்றியை வழங்கினார்கள். சகோதரி விஜயதரணி, காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டார் என்பதைவிட, 3 முறை தொடர்ந்து வெற்றியை வழங்கிய விளவங்கோடு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். பாஜக ஒரு புதைகுழி என்பதை அறிந்தே அவர் இறங்கி இருக்கிறார். அவர் எடுத்த முடிவு தவறு என்பதைக் காலம் பதில் சொல்லும்” என்று கூறினார்.

4 bismi svs

பாஜகவில் இணைந்த விஜயதரணி தில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “காங்கிரஸ் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான், 2019 நாடாளுமன்றத்திலும் என் பணியைத் தொடர விரும்பினேன். இடைத்தேர்தலிலும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2021 சட்டமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியைக் கேட்டேன். எனக்கு வழங்கப்படவில்லை. கொறடா பதவியைத் தந்தார்கள். அது முதல் நான் காங்கிரஸ் கட்சியில் விருப்பம் இல்லாமல் தான் இருந்துவந்தேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று அகில இந்தியக் காங்கிரஸ் தெரிவித்துவிட்டது.

விஜயதரணி விலகல் கடிதம்
விஜயதரணி விலகல் கடிதம்

இனியும் காங்கிரஸ் கட்சியில் நான் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளேன்” என்று கூறியபோது, இடைமறித்த செய்தியாளர்,“அப்படியானால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட உங்களுக்குப் பாஜக உறுதி வழங்கிவிட்டதா” என்று கேட்டபோது, “பாஜக தலைமைதான் எனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்க முடிவு செய்யவேண்டும். தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

பாஜகவில் இணைந்த விஜயதரணியைக் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவில்லை. அவர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்துச் சட்டமன்றச் சபாநாயகர் உத்தரவிடுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் கூறியுள்ளார். அரசியல் ஆடுகளத்தில் காங்கிரஸ் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எதிரிக் கட்சியான பாஜக அந்த விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளது.

விஜயதரணி - பிஜேபி
விஜயதரணி – பிஜேபி

அதே நேரத்தில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் விஜயதரணி கட்சியில் இருந்து விலகியதை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் “வென்றே தீரும்.. வென்றே தீரும்.. காங்கிரஸ் கட்சி வென்றே தீரும்.. என்ற கோஷமிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் ஒருவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியும்.. கொண்டாடுவோம்.. கொண்டாடுவோம்.. பீடை போனதை கொண்டாடுவோம்.. காங்கிரசை பிடித்த பீடை.. ஒழிந்தது.. ஒழிந்தது.. ஒழிக ஒழிக.. விஜயதரணி ஒழிக.. விஜயதரணியை கண்டிக்கிறோம் என்றும் சாலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சாலையில் பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.

மேலும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்று ஊகடங்கள் ஆருடம் கணித்துள்ளன. தமிழ்நாடு தேர்தல் களம் தற்போதைக்குச் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது என்பதே பொருத்தமுடைய செய்தியாகும்.

— ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.