₹40 ஆயிரம் மாட்டுக்காக ₹25 லட்சம் இழந்த திருடர்கள் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த பசு மாடு திருட்டு வழக்கில், போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி இரண்டு பேரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட மாடு மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், திருடர்களிடமிருந்து ₹25 லட்சம் மதிப்புள்ள வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர் வெங்கடாசலபுரம் பாரதி நகர் மயானக்காலனியில் வசிக்கும் அழகர்சாமி என்பவரின் பசு மாடு, கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி இரவு வீட்டின் முன்பாக கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து காணாமல் போனது. இதுகுறித்து அவர் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சார்பு ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், பசு மாட்டை தூத்துக்குடி மாவட்டம் பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த அருள் (23) மற்றும் குமாரபுரத்தைச் சேர்ந்த 17 வயது மைனர் சிறுவன் இணைந்து திருடிச் சென்றது தெளிவாகக் கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, திருட்டில் பயன்படுத்தப்பட்ட ₹25 லட்சம் மதிப்புள்ள லோடு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையின் போது இருவரும் கூறிய விளக்கம் போலீசாரையே ஆச்சரியத்திற்கும் சிரிப்பிற்கும் உள்ளாக்கியது.
திருடர்கள் கூறியது:
“சார்… லோடு ஏற்றி இறக்கிவிட்டு வரும்போது வண்டி சும்மா இருந்தது. வீட்டு முன் கட்டியிருந்த மாடு கண்ணில் பட்டுச்சு… அதையே லோட்ல ஏத்திக்கிட்டோம்!”
பின்னர் திருடப்பட்ட பசு மாடு மீட்கப்பட்டு அதன் உரிமையாளரான அழகர்சாமிக்கு ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அருள் மற்றும் மைனர் சிறுவன் இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.