நீதிமன்ற வளாகத்தில் அரிவாள் வீச்சு ! பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் கைது !
ஸ்ரீவில்லிபுத்தூர்: நீதிமன்ற வளாகத்துக்குள் விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (36) – தங்க முனீஸ்வரி தம்பதியினருக்கிடையிலான குடும்ப பிரச்சினையைத் தொடர்ந்து ஜீவனாம்சம் தொடர்பான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில், இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கும் பொறுப்பு வகிக்கும் நீதிபதி சுதாகர் அமர்வில் நீதிமன்ற பணிகள் நடந்துகொண்டிருந்தன.

அப்போது நீதிமன்றத்துக்குள் இருந்த பாலமுருகன் தன்னுடன் மறைத்து கொண்டு வந்திருந்த அரிவாளை திடீரென உள்ளே வீசியுள்ளார். அது வழக்கறிஞர்கள் அமரும் பகுதியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பதற்றம் நிலவியது.
தகவல் கிடைத்தவுடன் டிஎஸ்பி பாலசுந்தர் மற்றும் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பாலமுருகனை கட்டுப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஜீவனாம்சம் வழக்கு நடைபெற்று வந்ததும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நெருங்கிய நிலையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, நீதிமன்ற நுழைவாயிலில் எட்டு பேருக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், பாலமுருகன் நேரடி நுழைவாயிலை பயன்படுத்தாமல், நீதிமன்ற வளாகத்தின் பின்புற காம்பவுண்ட் சுவரை ஸ்டூல் உதவியுடன் தாண்டி உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீதித்துறையின் பாதுகாப்பை சவாலுக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.