தற்கொலையில் முடிந்த வட்டிக்கு வாங்கி வட்டிக்கு விடும் பிசினஸ் !
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமல நாச்சியாபுரத்தை சேர்ந்த முன்னாள் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளரும், பட்டாசு தொழிலாளியுமான ஆனந்த் (40). தனது நண்பர் உதயகுமார் உடன் இணைந்து வட்டிக்கு கொடுத்து தொழில் நடத்தலாம், என உறவினர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் வட்டிக்கு ரூ.35 லட்சத்துக்கு மேல் ஆனந்த் கடன் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் நண்பர் உதயகுமார் திடீரென ஆனந்திடம் வாங்கிய பணத்திற்கு வட்டியும் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆனந்த் தான் கடனாக வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பித் தர முடியாத நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். திடீரென நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக அவரது உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இறந்து போன ஆனந்த் எழுதி வைத்த கடிதத்தை பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கையில் வைத்துக் கொண்டு இறப்பிற்கு காரணமான உதயகுமார் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள், திடீரென சிவகாசி சாத்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
— மாரீஸ்வரன்