Welcome back வாசகாஸ்!
பதிப்புத் துறை லாபகரமாகவே இயங்குகிறது என்றும் நானும் வளர்ந்து வருகிறேன் என்றும் பதிப்பாளர் புஸ்தகா ராஜேஷ் மேடையில் சொன்னார்.
ஜீரோ பப்ளிகேஷன்ஸ் தொடர்ந்து புதிய புத்தகங்களை வெளியிடுகிறது. (பா.இராகவன் புத்தகங்களில் கையெழுத்திட்டு ஏற்பட்ட விரல் வலிக்கு வைத்தியம் செய்துகொள்வதாகத் தகவல்) லட்சக்கணக்கில் பரிசு அறிவித்து போட்டிகள் நடத்துகிறது.
விகடன் திரு.சு.வெங்கடேசனின் வேள்பாரி புத்தகம் லட்சம் பிரதிகள் விற்றதற்கு பிரமாண்டமாக விழா எடுக்கிறது.
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் நடமாடும் புத்தகக் கடை துவங்குகிறார். ஈரோடு புத்தகச் சந்தையில் நல்ல விற்பனை என்கிறார். மனுஷ்யபுத்திரன் தலையணை சைஸ் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடுகிறார்.
ராஜேஷ்குமாரின் மைந்தர் அப்பாவின் புத்தகங்களை சிறந்த அச்சில் வெளியிட்டு அத்தனைப் புத்தகக் கடைகளுக்கும் கொண்டு வந்துவிட்டார். அரசு இந்த முறை ஏராளமான புத்தகங்களுக்கு நூலக ஆர்டர் கொடுத்திருப்பதை பல பதிப்பாளர்களும் ரகசியமாகக் கொண்டாடுகிறார்கள்.
தமிழ்நாடு முழுக்க எக்கச்சக்கமாக புத்தக வெளியீட்டு விழாக்கள் அம்மன் திருவிழா மாதிரி நிகழ்கின்றன. காலச் சக்கரம் நரசிம்மா எழுதவிருக்கும் அடுத்த ஏழு நாவல்களின் பட்டியல் தருகிறார்.
புதியவர்களின் சரித்திர நாவல்களையும் வரவேற்று வெளியிடுகிறது வானதி. கூடுதல் சுறுசுறுப்புடன் மணிமேகலை, அல்லயன்ஸ் பதிப்பகங்கள் இயங்குவதாக தகவல்கள்..
வாசிப்புப் பழக்கம் அதிகரித்திருப்பதையும், புத்தகங்கள் வாங்கும் ஆர்வம் கூடியிருப்பதையும் உணரமுடிகிறது.
அதே சமயம் வார, மாத இதழ்களும் விற்பனைச் சரிவிலிருந்து மீண்டு எழுச்சியுற்றால் நன்றாயிருக்கும்.
Welcome back வாசகாஸ்!
— பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்