யார் இந்த மருத்துவர் பரூக் அப்துல்லா ?
அன்பிற்குரிய மீனம்மா கயல் அவர்களே, வணக்கம்.
நான் இங்கு நலம். தங்களது மற்றும் தங்களது குடும்பத்தாரின் நலம் அறிய ஆவல்.
நான் எம்பிபிஎஸ் எம்டி பயின்ற சுத்தமான அக்மார்க் நவீன மருத்துவன்.
முகநூலில் மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன்.
கொரோனா பேரிடர் காலங்களில் தொடர்ந்து பேரிடர் சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினேன்.
தொடர்ந்து மருத்துவத் துறையில் அதிகமாக லயிக்கும் போதும் அன்றாட வாழ்வின் அழுத்தங்கள் நம்மை தாக்குவதை விட்டும் என்னை வெளியே கொணர்வது, நான் பல விஷயங்களையும் படிப்பதும் அது குறித்து ஆர்வத்துடன் இருப்பதும் தான் என்று நம்புகிறேன்.
நல்ல இசை கேட்கும் போது அதில் லயிப்பேன். அதன் அலாதிகளை ஆராய்வேன். நான் பெற்ற இன்பத்தை என்னால் இயன்ற அளவு மொழி கொண்டு கடத்துவேன். என்னைப் போன்றே நிறைய பேர் அதை ரசித்திருப்பார்கள்.
கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் வரும் போது எனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் ஆர்வம் வெளியே வந்து விடும். தொடர் முழுவதுமாக பார்த்து பயணிப்பேன்.
அவற்றைப் பற்றி இங்கு எழுதுவேன். கிரிக்கெட் என்பது இந்தியாவைப் பொருத்தவரை நம்மை ஒன்றுபடச் செய்யும் மற்றொரு அம்சம். எனவே எனது ரசனையுடன் பலரும் ஒன்றுபடுவார்கள்.
அதற்கடுத்து இந்தப் புயல். நவம்பர் டிசம்பர் மாதங்களில் நமது கடற்கரையில் புயல்கள் தாக்குவது வாடிக்கை.

கஜா புயல் 2018 இல் நம்மைத் தாக்கிய போது அதை நேரடியாகப் பார்த்து அதன் பாதிப்பை உணர்ந்தமையால் நேரடியாக குழுவாக பல மாவட்டங்களுக்கும் சென்று மருத்துவப் பணியாற்றினோம். அப்போதிருந்து புயல் குறித்து படிப்பதும் அதை ஆராய்ச்சி செய்வதும் அது குறித்து மக்கள் அறிய எழுதுவதும் எனது வாடிக்கை ஆகிப்போனது.
புயல்கள் குறித்து தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக நான் எழுதி வருகிறேன். புரேவி, மிக்ஜாம், ஃபென்கல் என்று தொடர்ந்து தமிழ்நாட்டு கரை பக்கம் ஒதுங்கிய புயல்களை குறித்து எழுதி இருக்கிறேன்.
கூடவே நான் எனது மருத்துவப் பணியும் செய்து வருகிறேன்.
இவையன்றி மருத்துவம் சார்ந்த உணவியல் சார்ந்த நூல்கள்
– சிசேரியன் உயிர்காக்கும் சிகிச்சை
– ஆரோக்கியம் 2.0
– பேலியோ குணமாகும் நோய்கள்
– மெயிண்டெணண்ஸ் டயட்
– உணவை மாற்று உடலைக் காப்பாற்று
– ஊன் உடம்பு
– உயிர்த்தெழும் பெண்
– மனப்பருமன் குறைப்போமா
– எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான நீரிழிவு – கையேடு
– எம்பிபிஎஸ் மருந்தியல் துறை நூலை தமிழில் மொழிபெயர்த்து வரும் குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறேன். அந்த நூலும் விரைவில் வெளி வர இருக்கிறது.
இவற்றுடன்
– இந்திய மருத்துவ சங்கத்தின்
மருத்துவர்களுக்கான வாழ்வியல் மாற்றம் மற்றும் ஆரோக்கியம் பேணும் குழுவில் அங்கம் வகிக்கிறேன்.
– மருத்துவ மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சொற்பொழிவாற்றி வருகிறேன்
– ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தின் பேலியோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்காற்றி பொதுமக்களுக்கு குறை மாவு உணவு முறையின் நன்மைகளைப் பேசி வருகிறேன்.
இவற்றுடன்
– எனது மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள்
தமிழ்நாட்டின் முன்னணி நாளிதழ்கள், மின்னிதழ்களான
இந்து தமிழ் திசை
ஆனந்த விகடன்
மல்லிகை மகள்
டாக்டர் விகடன்
அவள் விகடன்
குங்குமம்
தினமலர்
தினமணி
புதிய தலைமுறை
நியூஸ்18
ஒன் இந்தியா
ஐபிசி தமிழ்
என்று தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவற்றுடன் கடந்த பத்தாண்டுகளாக முகநூல் வழியாக தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த மாற்ற வேண்டி வாழ்வியல் விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன்.
இதற்கு இடையே தான் நான் எழுதும் இசை, கிரிக்கெட், புயல் இன்னும் இதர விஷயங்கள் எனக்கு எழுதுவதில் படிப்பதில் சலிப்புத்தன்மை வராமல் இருப்பதற்காக நான் தொடர்ந்து பல விஷயங்கள் படிக்கிறேன். எழுதுகிறேன்.
இது என்னைப் பற்றி பெருமையாகக் கூறும் பதிவு அன்று.
எனக்கு பெருமை அறவே பிடிக்காது.

என்னைப் பொருத்தவரை எனது கருத்துகள் மற்றும் அறிவியல் தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எனது நோக்கம். என் பெயரோ எனக்கான விளம்பரமோ எங்கும் நான் எதிர்பார்ப்பதில்லை.
என் பெயர் இன்றி சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக் கொண்டிருந்தேன்.
என் நலம் விரும்பிகள் பலரும் எனது பதிவுகளை பலர் தங்களது பதிவுகளாக வெளியிடுகிறார்கள் எனவே உங்களின் பெயர் அடங்கிய ஸ்டாம்புடன் வெளியிடுங்கள் என்றார்கள்.
அப்போதிருந்து எனது பெயர் கூட பொது நல மருத்துவர் அதனுடன் எனது ஊர் சிவகங்கை சேர்த்து எழுதி வருகிறேன். இதுவும் எனது எழுத்து நான் எழுதியது என்பதைக் கூறுவதற்காகவும் உண்மைத்தன்மைக்காகவும் தானே அன்றி விளம்பரத்துக்காக அன்று.
அதற்குப் பிறகு நாட்டில் எது நடந்தாலும் கருத்து சொல்லும் அளவு இன்னும் நேரம் போதவில்லை.
அனைத்து விஷயங்கள் குறித்தும் எனக்குக் கருத்து உண்டு. ஆனாலும் அரசியல் பக்கம் பெரிதாகப் போவதில்லை காரணம் நான் கடைபிடிக்கும் நடுநிலை என்பதால் பொதுமக்களின் தனி நம்பிக்கை ஆகியவற்றைக் கடந்து எனது கருத்துகள் சென்று சேருகிறது.
எனவே நான் எங்கெல்லாம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமோ அங்கு கருத்து கூற வேண்டிய கடமை உண்டென்று கருதி பதிவிடுகிறேன். பல நேரங்களில் பொதுபுத்தியை எதிர்த்தே எனது கருத்துகள் அமையும் ஆயினும் அதை நான் நயத்துடன் சமூகத்திற்கு முன் வைத்து கருத்துரையாடல் நிகழ்வதைக் கண்டு நானும் கற்கிறேன்.
சமூக ஊடகங்களை என்னைப் பொருத்தவரை அறிவியல் சார்ந்த விழிப்புணர்வுக்காகவும் மூடநம்பிக்கை ஒழிப்புக்காகவும் மக்களிடம் வாழ்வியல் நோய்கள் குறித்து எச்சரிக்கவும் பயன்படுத்தி வருகிறேன்.
இதை இன்னும் தொடர்வேன். தங்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் எனது புயல் குறித்த கட்டுரைகள் சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளதை எண்ணி உள்ளபடி மகிழ்ச்சி கொள்கிறேன்.
கற்போம்
கற்றவற்றை பிறர் கற்க
எழுதுவோம்- பேசுவோம்
இதை விட நல்ல விஷயம் வேறென்ன இருக்கப் போகிறது.
தங்களது இந்தப் பதிவை நான் மகிழ்ச்சியாகவே எடுத்துக் கொண்டேன்.
சில நிமிடங்கள் வாய் விட்டுச் சிரித்தேன்.
நிச்சயம் மனம்புண்படும் படி எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தப் பதிவைக் கொண்டே
நான் சமூக ஊடகங்களை
எதற்காக? ஏன்? எப்படி ? உபயோகிக்கிறேன் என்பதை மக்களுக்குக் கூறப் பயன்படுத்திக் கொண்டேன்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.