கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனைக் கொன்று உடலை புதைத்த மனைவி!
கள்ளக்காதலனுடன் இணைந்து
கணவனைக் கொன்று
புதைத்த மனைவி!
கும்பகோணம் அருகே இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து அவரது உடலை புதைத்துள்ளார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அப்பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகேயுள்ள கீழ்மாந்தூர் பழைய தெருவைச் சேர்ந்தவர் பாரதி (35).
இவரது மனைவி திவ்யா (27).
கடந்த சில தினங்களாக திடீரென பாரதியைக் காணவில்லை என அவரது உறவினர் செல்வமணி என்பவர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில், பந்தநல்லூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
திவ்யாவின் செல்போன் உரையாடல் பதிவுகளை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்ததில் அவருக்கும் அதே பகுதி ஆர்.ஜே.நகரைச் சேர்ந்த டேவிட் என்ற சதீஷ்குமார் (38) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வருவது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, அவ்விருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இவ்விசாரணையில், திவ்யா தனது கள்ளக் காதலன் சதீஷ்குமாருடன் சேர்ந்து தனது கணவர் பாரதியை தலையில் அடித்து, கயிறால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
மேலும், கொலை செய்யப்பட்டு இறந்த பாரதியின் உடலை சதீஷ்குமார் ஒரு மினி லோடு வேன் மூலம் கொண்டு சென்று திருப்பனந்தாள் அருகேயுள்ள புட்டம் குறுக்கு ரோடு பகுதியில் பாலத்தின் அருகே புதைத்து இருப்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இக் கொலையில் தொடர்புடைய ஏனைய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.