மகளிர் கட்டணமில்லா விடியல் பயண நகரப் பேருந்து தொடக்கம்!
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் 05 மகளிர் கட்டணமில்லா விடியல் பயண நகரப் பேருந்து மற்றும் 01 புறநகர் பேருந்து இயக்கத்தினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதி, கீழப்பழுவூர் ஊராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை / குன்னம் கிளை சார்பில் பல்வேறு வழித்தடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 05 மகளிர் கட்டணமில்லா விடியல் பயண நகரப் பேருந்து மற்றும் 01 புறநகர் பேருந்து இயக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (26.05.2025) கொடியசைத்து துவக்கி வைத்து, திருமானூர் வரையில் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.சின்னப்பா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம், அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று 05 மகளிர் கட்டணமில்லா விடியல் பயண நகரப் பேருந்துகளையும் மற்றும் 01 புறநகர் பேருந்து இயக்கத்தினையும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்படி நகரப் பேருந்து தடம் எண்.023A காலை 8.50 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு கீழப்பழுவூர் வழியாக திருமானூர் சென்றடையும். மீண்டும் காலை 9.40 மணிக்கு திருமானூரில் இருந்து புறப்பட்டு கீழப்பழுவூர் வழியாக அரியலூர் வந்தடையும். நகரப் பேருந்து தடம் எண்.008A மாலை 4.35 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு கீழப்பழுவூர் வழியாக திருமானூர் சென்றடையும். மீண்டும் மாலை 5.35 மணிக்கு திருமானூரில் இருந்து புறப்பட்டு கீழப்பழுவூர் வழியாக அரியலூர் வந்தடையும் வகையில் மகளிர் விடியல் பயண பேருந்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரப் பேருந்து தடம் எண்.001A காலை 8.00 மணிக்கு இயக்கப்படும் மகளிர் விடியல் பயண பேருந்து அரியலூர் – ஓரியூர் (வழி) வி.கைகாட்டி, பொய்யூர் வழித்தடத்திலும், கீழப்பழுவூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நகரப் பேருந்து தடம் எண்.017A பிற்பகல் 2.00 மணிக்கு மகளிர் விடியல் பயண பேருந்து அரியலூரில் புறப்பட்டு கீழப்பழுவூர் வழியாக வி.கைகாட்டி சென்றடையும், பிற்பகல் 3.10 மணிக்கு வி.கைகாட்டியில் புறப்பட்டு கீழப்பழுவூர் வழியாக அரியலூர் வந்தடையும் வகையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நகரப் பேருந்து தடம் எண்.022A மாலை 4.10 மணிக்கு அரியலூர் – விளாங்குடி (வழி) அஸ்தினாபுரம், வி.கைகாட்டி வழித்தட நடையில் வி.கைகாட்டியிலிருந்து 2 கி.மீ தூரமுள்ள விளாங்குடி கிராமத்தை தொட்டு இயங்கும் வகையிலும், மேலும், நகரப் பேருந்து தடம் எண்.015A காலை 8.10 மணிக்கு அரியலூரிலிருந்து புறப்பட்டு கீழப்பழுவூர் வழியாக கோவிலூர் செல்லும் மகளிர் கட்டணமில்லா பேருந்து நடையினை கருப்பூர் பிரிவிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள பொய்யூர் கிராமத்தை தொட்டு இயங்கும் வகையிலும், புறநகரப் பேருந்து தடம் எண்.602E மாலை 5.35 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு மரவனூர் செல்லும் புறநகர் பேருந்து நடையினை கீழப்பழுவூர், அயன்சுத்தமல்லி வழியாக கல்லக்குடி வரை தடநிட்டிப்பு செய்து பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்து, திருமானூர் வரையில் பேருந்து பயணம் மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

கோடை மழையுடன் சூறைக்காற்றும் அடிப்பதால் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற மின்வாரியத்துறை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஊட்டியில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன. தென்மேற்கு பருவ மழை மற்றும் காற்றினால் சேதம் அடையும் மின்கம்பங்களை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான அளவிற்கு மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. மின்சாரம் வழங்குவது தொடர்பான புகார்கள் இருந்தால் மின்னகத்தை 98947 98947 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்
டெல்லிக்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமக்கான நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்க வேண்டும் என அந்த கூட்டத்தில் பேசினார். அனைத்து மாநில முதலமைச்சர்கள் மத்தியில் பேசினர். நம்முடைய முதலமைச்சர் பேசியதை பார்த்துதான் இவ்வாறு நிதியை கேட்க வேண்டும் என்ற எண்ணமே மற்ற மாநில முதல்வர்களுக்கு வந்துள்ளது. எனவே அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வழிகாட்டும் முதல்வராக நமது முதல்வர் அவர்கள் உள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் மகளிர் விடியல் பயணத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 700 கோடி பயணங்கள் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய புரட்சியாகும். இது மாதிரி எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. 700 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றால் அந்த அளவிற்கு பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிகிறது என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கூறினார்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிர்வாக இயக்குநர் திரு.இரா.பொன்முடி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் பொது மேலாளர் திரு.சதீஸ்குமார், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தராஜ், அரியலூர் வட்டாட்சியர் திருமதி.முத்துலெட்சுமி. தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.