ரூ.3 ஆயிரம் கடனுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எழுத்தாளர் மற்றும் சார் பதிவாளர் கைது!
விருதுநகர் மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் ரூ. 3 ஆயிரம் கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கிய நபருக்கு கடன் தள்ளுபடியான ரத்து பத்திரத்தை திருப்பி தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு எழுத்தாளர் மற்றும் சார் பதிவாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை எஸ்.பி.பட்டணத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (72). தேவகோட்டை கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்டுவதற்காக 1982-ல் ரூ. 3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இவர் பெற்ற கடனின் தொகை கடந்த 1990-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடன் ரத்து பத்திரம் மற்றும் அடமானம் வைத்த பத்திரத்தை திருப்பி பெறுவதற்காக விருதுநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சார் பதிவாளர் முருகனிடம் முறையான ஆவணங்களுடன் நேரடியாக சென்று பத்திரத்தை கேட்டுள்ளார்.
கடன் பத்திரத்தை திருப்பி தர வேண்டுமென்றால் ரூபாய் 5000 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தர முடியும் என முருகன் தெரிவித்துள்ளார்.
லஞ்சப்பணம் கொடுக்க விருப்பமில்லாத ஆரோக்கியசாமி உடனடியாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அவர்களின் ஆலோசனைப்படி சார் பதிவாளர் முருகனிடம் தொடர்பு கொண்டு நீங்கள் கேட்ட லஞ்ச பணம் ரெடியாக இருப்பதாகவும், எங்கு கொடுக்க வேண்டும் என கேட்கவே நீங்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அங்கு சென்று லஞ்சப்பணத்தை எழுத்தாளர் மோகனிடம் கொடுக்கும்படி முருகன் தெரிவிக்கவே லஞ்ச பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி.ராமச்சந்திரன் தலைமையிலான ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், ரசாயனம் தடவப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து சார் பதிவாளர் முருகன் எழுத்தாளர் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
— மாரீஸ்வரன்.