‘எளிமையின் இலக்கணம்’ தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை
அங்குசம் சமூக நல அறக்கட்டளை தொடர்ந்து நடத்திவரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை நிகழ்வில் 10.05.2025ஆம் நாள் ‘எளிமையின் இலக்கணம்’ தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்வில், திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இந்திரஜித் சிறப்புரையாற்றினார். சிறப்புரையாளரை அறிமுகம் செய்துவைத்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் சிறப்புரையாளருக்குப் பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பாரதிதாசன் பல்கலைககழக பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் இந்திரஜித்-க்கு நூல்களை வழங்கினார்.
நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்,“இரா. நல்லகண்ணு பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மாவட்டப் பிரிவினைக்குப் பின்பு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். தப்போது மத்திய குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கிறார்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை முடிந்து வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அப்போது ஆரம்பித்த நல்லகண்ணுவின் அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.
இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். தமிழக அரசின் அம்பேத்கர் விருதையும் தகைசால் தமிழர் விருதையும் பெற்றுள்ளார். இதில் கிடைத்தத் தொகைகளையும் கட்சிக்கே வழங்கினார். இதனால் பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி என்னும் பெயரைப் பெற்றார்” என்று குறிப்பிட்டார்.
சிறப்புரையாற்றிய இந்திரஜித்,“2ஆவது உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பிரிட்டிஷ் படைகளுக்கு ஆதரவு தெரிவித்து தோழர் நல்லகண்ணு படித்துக்கொண்டிருந்த உயர்நிலைப்பள்ளியில் நாடகம் நடைபெறுகின்றது. யுத்தம் எங்கே நடைபெற்றாலும் எளிய மக்களுக்குத்தான் பாதிப்பு என்று அந்த நாடகத்தை மாணவர் நிலையில் இருந்த நல்லகண்ணு நிறுத்துகிறார். உடனே காவல்துறை வரவழைக்கப்பட்டு மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகின்றது. பள்ளிப் பருவத்திலே சமூக விழிப்புணர்வு சார்ந்த அரசியல் சிந்தனையோடு நல்லகண்ணு இருந்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கோட்டை உள்ளது. அந்த கோட்டைக்கு இரு வழிகள் உள்ளது. கோட்டைக்குள் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆண்கள் கோட்டையிலிருந்து வெளியே வந்து உள்ளே செல்ல ஒரு வழியைப் பயன்படுத்துவார்கள். பெண்கள் கோட்டையைவிட்டு வெளியே வரமுடியாது. பெண்கள் இறந்தவுடன், உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக 2ஆவது வழியைப் பயன்படுத்துவார்கள். இந்நிலையில் கோட்டையைப் பராமரிக்கும் தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. நல்லகண்ணுவின் ஆதரவில் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. போர் முடிந்தவுடன் நாட்டில் பஞ்சம் ஏற்படுகின்றது. ஜமீன்தார்கள் பாதுக்கி வைத்திருந்த நெல்மூட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் உதவியோடு வெளியே கொண்டுவந்து மக்கள் பயன்படுத்தும் அளவிற்க நல்லகண்ணு தொடர்ந்து உழைத்தார்.
1948இல் நெல்லை சதி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக நல்லகண்ணு அறிவிக்கப்படுகின்றார். பின்னர் கைது செய்யப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்படுகின்றார். விவசாய தொழிலாளர்களின் நலனில் அக்கறைக் கொண்டு இந்திய பொதுவுடமை இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். தோழர் நல்லகண்ணு வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் குறித்துக் கொள்ள கை குறிப்பேட்டை எப்போதும் வைத்திருப்பார். படிப்பதற்கு சில நூல்களையும் வைத்திருப்பார். குறிப்பேட்டில் கவிதைகளையும் எழுதி வைத்திருப்பார். அவர் எழுதிய குறிப்புகள் இன்றும் உள்ளன. அவற்றைத் தொகுக்கவேண்டிய கடமை நமக்குள்ளது.
தோழர் நல்லகண்ணு மகிழ்ச்சி என்றால் சிறிதளவே புன்கை செய்வார். மனத்திற்குக் கனமான செய்தி என்றால் சிறிது நேரம் அமைதியாக இருப்பார். பின்னர் இயல்பு நிலைக்கு வந்துவிடுவார். எதையும் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கமாட்டார். தோழர் நல்லகண்ணு சாதி, மத சிந்தனைகளுக்கு எதிராகக் களமாடியவர். எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஒரு நிறை என்ற கொள்கையை வலியுறுத்திவர். ஒரு தலித் தோழர் இல்லத்து திருமணவிழாவைத் தலைமை தாங்கி நல்லகண்ணு நடத்தி வைத்த பின்னர், அந்தத் தலித் தோழர் நல்லகண்ணுவிடம் பேசும்போது, ‘உங்களைப் போன்ற தலித் தலைமையில்தான் எங்கள் இல்ல திருமணம் நடைபெறவேண்டும் என்ற விரும்பினேன்” என்று கூறியபோது தோழர் நல்லகண்ணு தன் சாதியைப் பற்றிக் குறிப்பிடாமல் சிரித்துக்கொண்டார்.
தோழர் நல்லகண்ணுவிற்குக் கட்சி ஒரு கோடி ரூபாய் அளவில் நிதி திரட்டி வழங்கியது. தொகையைப் பெற்றுக்கொண்ட தோழர் அந்தத் தொகை முழுவதையும் கட்சிக்கே அளித்துவிட்டார். மாணவர் நகலகம் ஐயா அருணாசலம் தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பில் கார் ஒன்றை வழங்கி சிறப்பித்தார். அதையும் கட்சியிடம் நல்லகண்ணு ஒப்படைத்துவிட்டார். தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருது, தகைசால் தமிழர் விருது வழங்கியது. விருதுகளுக்கான வழங்கப்பட்ட தொகைகளைக் கட்சிக்கே வழங்கினார். இப்படி பிழைக்கத் தெரியாத அரசியல்வாதியாக உள்ளரே என்று அவர் மீது இரக்கம் கொண்டு மக்கள் பேசினர். இப்படி பிழைக்கத் தெரியாக நல்லகண்ணு போன்ற அரசியல் தலைவர்களால்தான் மக்கள் பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
1980களின் தொடக்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில பெரிய வகுப்பு கலவர வெடித்து கிளம்பியது. கலவரப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த நல்லகண்ணு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மாமனார் வெட்டி கொலை செய்யப்பட்டார். அப்போது திருச்சியிலிருந்த நல்லகண்ணுவிற்கு இந்தச் செய்தி கிடைக்கின்றது. “மாமா அந்தப் பகுதியில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரை யாரோ கொலை செய்துவிட்டு தலித்கள் மீது பழியைச் சுமத்துகின்றார்கள்” என்று கருத்து தெரிவித்தார். பின்னர் கலவரப் பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அமைதியை ஏற்படுத்தினார். அதன்பின்தான் கலவரப் பகுதிகளில் அமைதி திரும்பியது.
தோழர் நல்லகண்ணு இலக்கியங்கள் மீது தீரா பற்றுக் கொண்டிருந்தார். ஜீவாவின் எழுத்துகளை இரசித்து படிப்பார். பாரதி, பாரதிதாசன் குறித்த செய்திகளை முழுமையாக படித்தவர். தான் படிக்கும் இதழில் வெளிவந்த செய்தி பாராட்டுக்குரியது என்றால் உடனே அந்த எழுத்தாளரைப் பாராட்டி அஞ்சல் அட்டையில் தகவல் தெரிவிப்பார். எந்த ஊர் சென்றாலும் கட்சித் தோழர்களின் இல்லங்களில் உணவருத்தி தங்கும் வழக்கம் கொண்டவர். பொதுவுடமை இயக்கம் சார்ந்த தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு வாழ்வு தமிழர்களின் மேம்பாட்டுக்கான வாழ்வாகவே அமைந்திருந்தது. அரசியலில் அடியெடுத்து வைப்பவர்கள் தோழர் நல்லகண்ணுவை முன்மாதிரியாகக் கொள்ளலாம்” என்று உரையை நிறைவு செய்தார்.
அங்குசம் அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் இதழ்களை நினைவுப் பரிசாக வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் ரேவதி ஜெடிஆர் நன்றி கூற விழா நிறைவுற்றது.
— ஆதவன்.