அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 3 நாள் குழந்தை ! 5 மணி நேரத்தில் மீட்பு !
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகம நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் இவரது மனைவி சுகன்யா என்பவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்லி மருத்துவமனை பணியாளர் சீருடை அணிந்த மர்மப் பெண் ஒருவர் அந்த ஆண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் குழந்தை திரும்ப வராததால் அந்த பெண் மற்றும் உறவினர்கள் இது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஆட்டோ ஒன்றில் அந்த குழந்தையை அந்த மர்ம பெண் தூக்கிக்கொண்டு செல்வது பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். அப்பொழுது சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே குழந்தையை மீட்டு விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே குழந்தை கிடைத்த தகவல் அறிந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில் குழந்தையும் குழந்தையின் தாயாரையும் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து அங்கிருந்து அவர்களுக்கு புகைப்படத்தை அனுப்பிய பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இதுபோன்று நள்ளிரவு மற்றும் அதிகாலை வேலைகளில் அனைத்து வார்டுகளிலும் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த துறையூர் அருகே கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் விடியற்காலை தூங்கிக் கொண்டிருந்தபோது சுமார் ஒன்றரை பவுன் தாலியை மர்ம நபர் எடுத்துச் சென்றதாக புகார் பதிவாகியுள்ளது. இதுபோன்று நடுநிசி மற்றும் விடியற்காலை நேரங்களில் அரசு மருத்துவமனை குறிப்பாக பெண் வார்டு பகுதிகளில் மர்ம நபர்கள் மற்றும் மர்ம பெண்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே மருத்துவ நிர்வாகமும், காவல் துறை அதிகாரிகளும் இது போன்ற குற்றச்செயல்கள் இனிமேல் நடக்காத வண்ணம் மருத்துவமனைக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொிவித்துள்ளனர்.
— சிவகுமார்








Comments are closed, but trackbacks and pingbacks are open.