காட்டுத்தீயில் கருகிய 40 ஆடுகள் ! அதிர்ச்சியில் கிராம மக்கள் !
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகிலுள்ள சிப்பிப்பாறை கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெப்பமான காலநிலை மற்றும் உலர்ந்த சூழ்நிலை காரணமாக தீ வேகமாக பரவியதாகக் கூறப்படுகிறது.
சிப்பிப்பாறையைச் சேர்ந்த முருகன் மற்றும் சங்கரன்கோவில் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை ஆகியோர் காட்டுப்பகுதியில் கிடை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தனர். இந்நிலையில், மதிய நேரத்தில் திடீரென ஏற்பட்ட தீ, கண நேரத்தில் கிடை இருந்த பகுதிக்குச் சென்றதால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆடுகள் தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தன.
இந்த விபத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பரவியதும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தண்ணீர் மற்றும் மணல் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ வேகமாக பரவியதால் பெரிய அளவிலான சேதத்தைத் தவிர்க்க முடியவில்லை.
சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், காட்டுத்தீ மனித தவறால் ஏற்பட்டதா அல்லது இயற்கை காரணங்களாலா ஏற்பட்டதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.