ஜனநாயகனும் மீனவ நண்பனும்
எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து விஜய்க்கும், முதலமைச்சரான பிறகு அவர் ஹீரோவாக நடித்த படம் வெளியாகியுள்ளது என்ற ‘பெருமை’ கிடைத்துள்ளது. அத்துடன் கூடுதல் ‘பெருமை’ ஒன்றும் உண்டு.
1977ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக வெற்றி பெற்ற நிலையில், எம்.ஜி.ஆர் ஹீரோவாகவும் டைரக்டராகவும் இருந்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்‘ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வருவதற்காக முதலமைச்சராகப் பதவியேற்கும் நாளைத் தள்ளிப்போட்டார். முதலமைச்சரான பிறகு, போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து 1978 ஜனவரியில் படம் வெளிவந்தது. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்திற்கு முன்பாகவே, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த மீனவ நண்பன் படம் முழுமையாக முடிந்துவிட்டது. எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பிறகு, திரைக்கு வந்த அவரது முதல் படம் ‘மீனவ நண்பன்‘தான்.
மீனவ மக்களின் உரிமைக்காக அவர்களோடு ஒருவராக வாழ்ந்து வில்லன்களை எதிர்த்து வெற்றி பெறுவதுதான் மீனவ நண்பன் படத்தின் கதை. ‘மீனவ நண்பன்’ எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதுதான், சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்துவதாகக் கூறி, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, காவல்துறை அதிகாரி தேவாரம் தலைமையிலான போலீஸ் படையைக் கொண்டு மீனவர்களை சுட்டுக் கொன்றது அரசு.
விஜய் முதலமைச்சரான பிறகு அவரது ஜனநாயகன் படம் வெளியாகியுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடும் மாணவர்கள் மீது ‘ஜனநாயகன்’ விஜய் அரசு கொடூரத் தாக்குதல் நடத்தி விரட்டி அடிக்கிறது. கல்லூரிக்குள் புகுந்து கைது செய்கிறது. மீனவ நண்பன் எம்.ஜி.ஆர் மெரினாவில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஜனநாயகன் விஜய், மாணவர்களின் ஜனநாயகப் போராட்டங்கள் நடக்காதபடி மெரினாவையே மூடிவிட்டார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.