அஞ்சு “C”-ய ”கேட்ச்” பண்ணுங்க பத்மஸ்ரீ விருது பெற்ற மூவர் பங்கேற்ற விருது வழங்கும் விழா
- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஒரே மேடையில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற விருதாளர்கள் மூவரை அமர வைத்து அழகு பார்க்க முடியுமா? அந்த மூவரையும் கௌரவிக்க முடியுமா? தடைகள் பல கடந்து அவர்கள் சாதனையாளர்களாக மிளிர்ந்த நிகழ்வுகளை, நிகழ்கால மாணவியர்க்கு எடுத்துரைத்து அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்ட முடியுமா? முடியும். எல்லாம் முடியும் என நிரூபித்துக் காட்டி உள்ளது திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி. மார்ச்-9 சனிக்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் அந்த நிகழ்வு நடந்தேறியது. அத்துடன் 2021ல் கல்லூரி நிர்வாகம் நடத்திய திருச்சிராப்பள்ளி மாவட்ட பள்ளி மாணவியர்க்கு நடத்திய பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தது.
IGnite (இக்னைட்) கலைத் திறன் போட்டிகளைக் கடந்த 2021ல் நடத்தியது. தனி நபர் போட்டிகள் 6 வகை. குழுப் போட்டிகள் 17 வகை. 37 பள்ளிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றன. 1500 மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்ட னர். மொத்தம் இருபத்தி மூன்று வகையிலானப் போட்டிகளில் வென்ற மாணவியர்க்கு விழா மேடையில் ஷீல்டுகள் வழங்கப் பட்டன.
முசிறி அமலா மேனிலைப் பள்ளி மாணவியர்கள் முதலிடம் பிடித்து இக்னைட் கோப்பையினைத் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற மாணவியர்க்கு பத்மஸ்ரீ விருதாளர்கள் விருதுகள் வழங்கிச் சிறப்பித் தனர். பத்மஸ்ரீ விருது பெற்ற அந்த மூவரில் ஒருவர் விளை யாட்டுக்கென அர்ஜுனா விருது பெற்ற ஷைனி வில்சன் என்பது கூடுதல் சிறப்பாகும். தடகள வீராங்கணை ஷைனி வில்சன், “ஸ்கோப்” சுப்புராமன், “கிராமாலயா” தாமோதரன் மற்றும் கல்லூரி செயலாளர் கோ.மீனா, கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி கு. சந்திரசேகரன் ஆகியோரின் உரை வீச்சு அரங்கில் மாணவியர்க்கு ஊக்கமும் உற்சாகமும் அள்ளித் தருவதாக அமைந்திருந்தது.
இந்தியத் தடகள வீராங்கணைகளில் குறிப்பிடத்தக்கவர் ஷைனி வில்சன். அவருக்கு வயது ஐம்பத்தியேழு. ஒலிம்பிக் உட்பட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 25 தங்கப்பதக்கங்கள். 7 வெள்ளிப் பதக்கங்கள். 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர். இவருக்கு மத்திய அரசு ஒரு முறை பத்மஸ்ரீ விருதும், மற்றொரு முறை விளையாட்டுத் துறைக்கென தரப்படும் அர்ஜுனா விருதும் வழங்கிக் கௌரவித்துள்ளது.
“1992ல் பார்சிலோனா ஒலிம்பிக் போட்டி. அதில் இந்திய தேசியக் கொடி ஏந்திச் சென்ற முதல் பெண் நான். என்னுடைய தடகள ஓட்டப் பந்தய வாழ்க்கையானது, நிஜ வாழ்வில் பல தடைகளைத் தாண்டிக் கடந்து வந்ததாகும். எனக்குக் குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் தான் இருக்கும். அந்த நேரத்தில் தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள். எனக்குப் பிரசவம் நடந்து ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்காக என்னால் போட் டியில் பங்கேற்று ஓடாமல் இருக்க முடியுமா என்ன? வீட்டில் பெரியவர்கள் “நீ நல்லா யோசிச்சு நீயே முடிவு எடுத்துக்கோ” எனச் சொல்லி விட்டனர். எனக்கு அதுவே கிரீன் சிக்னல் தந்தது போலானது. தெற்காசிய கூட்டமைப்பு விளை யாட்டுப் போட்டிகளில் நான் பங்கேற்றேன். 800 மீட்டர் தூரத்தினை 1:59:85 நிமிட நேரத்தில் பறந்து ஓடி வந்து புதிய உலக சாதனை படைத்தேன்.
மாணவியர்கள் உங்களுக்கு இதனை ஏன் சொல்கிறேன் என்றால், விளையாட்டு படிப்பு எதுவாக இருந்தாலும் எந்த நிலையிலும் ஊக்கமுடன் உற்சாகத்துடன் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.” என்றார் ஷைனி வில்சன். கிராமங்களில் தனி நபர் கழிவறைகள், அந்தக் கழிவறை களின் தங்கும் பொருளான சிறுநீர், மலம் போன்றவற்றை திடக்கழிவு இயற்கை உரமாக உற்பத்தி செய்ய வைத்தவர், 2021ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற திருச்சி “ஸ்கோப்” தொண்டு நிறுவனத்தின் சுப்புராமன். கடந்த 35 ஆண்டுகளாக அதிலும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கிராமப்புற தனிநபர் கழிவறைகள், பொது சுகாதாரம் மற்றும் மகளிர்க்கான மிக எளிய காட்டன் துணிகளால் ஆன நாப்கின் தயாரிப்பு போன்றவைகளில் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம். அதன் தலைவர் தாமோதரன். தமிழகம், பாண்டி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் கிராமங்களில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட தனி நபர் சுகாதாரக் கழிவறைகள் கட்டித் தந்துள்ளார் கிராமாலயா தாமோதரன். இதற்கென 2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது மத்திய அரசு.
“திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர்களையும், சுற்றுப்புற கிராமங் களையும் பிரித்துப் பார்க்க முடியாது. காரணம், அந்த அளவுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் எங்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டச் செயல்பாடுகள் நடந்தேறியிருக்கும். விளையாட்டு, சமூகப் பணி போன்றவைகளில் உங்களின் ஆகச் சிறந்த முன்னோடிகளாக இந்த மேடையில் வீற்றிருக்கும் விருதாளர்களை உங்கள் உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டார் கல்லூரி செயலாளர் கோ.மீனா.
“தடகள வீராங்கனை பத்மஸ்ரீ அர்ஜுனா ஷைனி வில்சன், பத்மஸ்ரீ ஸ்கோப் சுப்புராமன், பத்மஸ்ரீ கிராமாலயா தாமோதரன் ஆகியோரின் சாதனைகள் உங்களுக்கு உற்சாகம் ஊட்டட்டும். நீங்கள் முதலில் நான்கு “சி” யைக் கைவரக் கொள்ளுங்கள். CREDIBILITY–நம்பகத்தன்மை, COMMUNICATION–தொடர்பு, CO-OPERATION-ஒத்துழைப்பு, CREATIVITY–படைப்பாற்றல் ஆகிய நான்கு “சி”க்களை முதலில் கைப்பற்றுங்கள். அடுத்து இன்னொரு “C” யான CONFIDENCE—தளராத நம்பிக்கையினைக் கைப்பற்றுங்கள். இந்த ஐந்து “சி” க்களும் உங்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்க்கையில் உங்களையும் சாதனையாளர்களாக மாற்றும். மாற்றிக் காட்டும்” என்று சுவாரஸ்யமாகப் பேசினார். கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி கு.சந்திரசேகரன்.