சர்வேயர் பார்த்திபன் லஞ்சம் கேட்பதாக 72 வயது முதியவர் தரையில் அமர்ந்து போராட்டம் – குளித்தலை பரபரப்பு !
குளித்தலையில் நிலத்தை அளந்து கொடுக்க சர்வேயர் பார்த்திபன் லஞ்சம் கேட்பதாக 72 வயது முதியவர் தாலுக்கா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் பஞ்சாயத்து மேல சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் விவசாயி முதியவர் அர்ஜுனன் வயது 72. இவர் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராகவும் உள்ளார்.
இவர் கூட்டு பட்டாவில் உள்ள வீட்டு மனையை அளந்து தனி பட்டா கேட்டு கடந்த ஒன்றரை ஆண்டாக குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வே அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்து வருவதாகவும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்,
நிலத்தை அளந்து கொடுக்க சர்வேயர் பார்த்திபன் லஞ்சம் கேட்பதாக கூறி ஜமாபந்தி நிறைவு நாளான இன்று கழுத்தில் பதாகை அணிந்து, கம்யூனிஸ்ட் கொடியை கையில் ஏந்தி குளித்தலை தாலுகா அலுவலகம் வந்தார்.
பின்னர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். சம்பவம் அறிந்து அங்கு வந்த குளித்தலை தாசில்தார் சுரேஷ் அவரை அலுவலக அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவ இடத்திற்கு சர்வேயர் பார்த்திபனை வரவழைத்து நாளை கட்டாயம் நிலத்தை அளந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை அடுத்து முதியவர் அங்கிருந்து சென்றார். இந்த நாள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-நௌஸாத்