மாவட்ட அளவிலான கையுந்துபந்து போட்டியில் அசத்திய மாணவ – மாணவிகளுக்கு பாராட்டுவிழா !
மாவட்ட அளவிலான கையுந்துபந்து போட்டியில் அசத்திய மாணவ – மாணவிகளுக்கு பாராட்டுவிழா ! தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகமும் திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகமும், இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான கையுந்துபந்து போட்டி ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சமயபுரம் டோல்பிளாசா அருகிலுள்ள தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் பிரிவில் 20 அணிகளும், மாணவிகள் பிரிவில் 12 அணிகளும் பேரார்வத்தோடு இந்தப் போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சுவாரஸ்யமான போட்டிகளின் முடிவில், மாணவியர்களுக்கான இறுதிப் போட்டியில் அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முசிறி அணியும், அரசு உயர்நிலைப்பள்ளி பூலாங்குடி அணியும் மோதின. இதில் அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முசிறி அணி 25-10, 25-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.
மாணவர்களுக்கான இறுதிப் போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியும், எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி உறையூர் அணியும் மோதின. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி 24-26, 25-12, 25- 18 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதலிடம் பெற்றது.
முன்னதாக, இந்த இறுதிப் போட்டியை சர்வதேச கையுந்துபந்து விளையாட்டு வீரர்J.நடராஜன், Manager, I.O.B. தொடங்கி வைத்தார். நிறைவாக, திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழக தலைவர் முனைவர் தங்க.பிச்சையப்பா தலைமையில் பரிசளிப்பு விழா நிகழ்வுகள் தொடங்கின. திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழக செயலாளரும், முன்னாள் இந்திய கையுந்துபந்து விளையாட்டு வீரருமான S.கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறைத் தலைவர் முனைவர் தர்மர் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் அசோசியேட் டீன் முனைவர் வி.ராஜூ மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் அட்மின் ஆபிஸர் சதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்கள். திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழக பொருளாளர் சிவாஜி நன்றியுரை நல்க விழா நிறைவு பெற்றது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை மானிய கோரிக்கையின்போது, மாவட்ட அளவில் விளையாட்டரங்கங்களை ஏற்படுத்துவது; ஊராட்சிகள் தோறும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை செய்திருந்தார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், பள்ளி அளவிலேயே மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அதன் வழியே தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையிலான, திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகத்தின் சீரிய முன்னெடுப்பு பலரது பாராட்டுக்களை பெற்றிருக்கிறது.