புவனேஸ்வரன் கொலை வழக்கும் – ஆம்ஸ்ட்ராங் தொடர்பும் ! உண்மையில் நடந்தது என்ன ?
புவனேஸ்வரன் கொலை வழக்கும் – ஆம்ஸ்ட்ராங் தொடர்பும் ! உண்மையில் நடந்தது என்ன ? ஆம்ஸ்ட்ராங் பட்டியலின மக்களின் வழிகாட்டியா? அவரது பாதை விடுதலைக்கான அரசியல் பாதையா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை தோழர் ஒருவர் அனுப்பி படிக்க சொன்னார்.
இப்போதெல்லாம் ஆம்ஸ்ட்ராங் பற்றி வரும் அவதூறு, செய்திகளை நான் படிப்பதில்லை. தோழரின் நிர்பந்தத்தால் படித்தேன். படிக்க படிக்க அதிர்ச்சி தொற்றிக்கொண்டது.
அந்த பதிவில் “2012 ஆம் ஆண்டு ஆவடி அருகே மோரை என்ற கிராமத்தில் நடைபெற்ற நிலமோசடி, கட்டப்பஞ்சாயத்து மற்றும் அது தொடர்பில் நடந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு பங்கு இருந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
புரசை ரங்கநாதன் நாயுடு என்கிற முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரின் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில மோசடி திட்டங்களுக்கு அவர் தேர்ந்தெடுத்த ஒரு தலித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது.
கோடிகளில் புரளும் நிலமோசடியில் இறங்கி உள்ளூர் ரவுடி முதல் அனைத்து கட்சி கும்பல்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து காரியத்தை முடிப்பதில் பெரும் புள்ளியாக ரங்கநாதனின் வலதுகரமாக வலம் வந்தார் ஆம்ஸ்ட்ராங்.
ஆவடி அருகேயுள்ள மோரை என்ற பகுதியில் புவனேஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞரின் தந்தை சிவா என்பவர் அந்த கிராமத்திலிருந்த தமது பூர்வீக பட்டா நிலத்தை ஆவடியில் குடியேறி தொழில்புரியும் தொழிலாளர்கள் உழைப்பாளர்களுக்கு விற்பனை செய்தார்.
அந்த நிலத்தை சிறுகச் சிறுக சேமித்த பணத்தில் ஒரு செண்ட், ஒன்றரை செண்ட் நிலத்தை விலைக்கு வாங்கிய இடைநிலை, பட்டியலின மக்களை கத்தி முனையில் அடித்து துரத்தி ரங்கநாதனின் திட்டத்திற்கேற்ப உள்ளூர் ரவுடி கௌரி சங்கர் என்பவரின் துணையோடு ஆம்ஸ்ட்ராங் கட்சியினர் அதை ஆந்திர சமீன்தாரின் சொத்து எனவும் தங்களுக்கு சமீனின் வாரிசுகள் பவர் வழங்கியுள்ளதாகவும் கூறி அபகரித்தனர்.
தங்கள் நிலம் பறிபோவதை எதிர்த்து நிலம் வாங்கியவர்களின் துணையோடு உள்ளூர் கம்யூனிஸ்டுகளின் துணையோடு நிலமீட்பு போராட்டத்தை மோரை நில மீட்புக்குழு என்ற பெயரில் முன்னெடுத்தார் மாற்றுத் திறனாளி புவனேஸ்வரன்.
அப்போராட்டங்களை ஒடுக்க ஆம்ஸ்ட்ராங் கட்சியினர் பாதிக்கப்பட்டோரின் வீடு, வீடாகச் சென்று மிரட்டல் விடுத்தனர்.தலித் தலித் அல்லாதார் என்ற பாகுபாடின்றி அவர்களின் மிரட்டலை கூட்டத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பேசியும் காவல்துறையில் புகாரும் அளித்தனர்.
ஆனால் படைபலமும், அதிகார பலமும் கொண்ட நிலமோசடி கும்பலை எதிர்கொள்ளமுடியவில்லை. மோரையைத் தொடர்ந்து அதனருகில் இருந்த வெள்ளானூர் எனப் பரவிய இவர்களின் நிலமோசடி கொள்ளைக்கு எதிராக மோரையில் எழுந்த போராட்டத்தை ஒடுக்க 2012 ல் புவனேஸ்வரன் ரவுடிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
புரசை ரங்கநாதன், ஆம்ஸ்ட்ராங், கௌரி சங்கரே புவனேஸ்வரனைக் கொன்றதாக அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
அந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தப் படுகொலைக்குப் பிறகு இவர்களின் நிலமோசடியை எதிர்க்க பலரும் அச்சப்பட்டனர்.” இது தான் அந்த அதிர்ச்சி சம்பவம்.
இந்த சம்பவ வழக்கின் உண்மை நிலை என்ன?
கடந்த 2012-ஆம் ஆண்டு கொளத்தூர் காந்தி நகரில் வசித்து வந்த புவனேஸ்வரன், தனது மகளுடன் ஜனவரி 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 12.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவரது வீட்டின் அருகே உள்ள ஐந்தாவது குறுக்குத் தெருவில் இரண்டு பைக்குகளில் வந்தவர்கள் அவர்களை வழிமறித்தனர். அவர்களில் ஒருவர் அந்த பெண்ணை பிடித்துக்கொள்ள, மற்றொருவர் பைக்கை விட்டு இறங்கிய புவனேஸ்வரனை அரிவாளால் வெட்டினர். அவர்கள் குழந்தையை சாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

அக்கம்பக்கத்தினர் புவனேஸ்வரனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரின் குடும்பத்தினர் வந்ததும் பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் “வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக” அறிவித்தனர்.
கொலை நடந்த இடத்தை அப்போதைய மேற்கு சென்னை காவல் இணை ஆணையர் கே.சங்கர், வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் கே.கண்ணன் ஆகியோரின் முதற்கட்ட விசாரணையில் இது நில அபகரிப்பு தொடர்பாக தூண்டப்பட்ட கொலை என தெரியவந்தது.
யார் அந்த புவனேஸ்வரன்?
கொலை செய்யப்பட புவனேஸ்வரன் ஒரு மாற்றுத்திறனாளி. அவரது தந்தை சிவா. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்த சிவா என்பவருக்கு நண்பர் மாதவன் என்பவர் ஆவடி அருகே வீராபுரத்தில் உள்ள மோரை கிராமத்தில் உள்ள 30 ஏக்கர் நிலத்திற்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்துள்ளார். சொத்தை கவனிக்க SETC-ல் இருந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். பின்னர் 30 ஏக்கரில் 20 ஏக்கரை விற்று லாபத்தில் ஒரு பங்கை மாதவனுக்கு கொடுத்தார். பின்னர், மீதமுள்ள 10 ஏக்கரை மாதவன் சிவாவுக்கு பரிசாக அளித்தார்.

மேற்படி நிலத்தை திமுக எம்.எல்.ஏ.ரங்கநாதன் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் ஒரு குழுவினர், தனக்கும் மாதவனுக்கும் சொந்தமான 30 ஏக்கர் நிலம் உட்பட 100 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக சிவா புகார் கூறினார். இதற்கு எதிராக மோரை நில மீட்டுக் குழுவை உருவாக்கி சட்டப்போராட்டம் நடத்தியவர் தான் புவனேஸ்வரன்.
நில ஆக்கிரமிப்பு கும்பலுக்கு எதிராக பல RTI விண்ணப்பங்களை தாக்கல் செய்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அந்தப் பகுதி கம்யுனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். அந்த போராட்டத்தில் விளைவால் அவர் 18 ஏக்கருக்கு மேல் மீட்க முடிந்தது எனவும் மீதியை மீட்பதற்காக மேலும் பல ஆர்டிஐகளை தாக்கல் செய்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் விளைவு அவர் படுகொ லை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோர் மீது விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் தூண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாகவும், குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை சேர்க்கவில்லை என்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று புவனேஸ்வரனின் தந்தை சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாக கூறி, அதை ரத்து செய்ததுடன், டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு நிகரான அதிகாரி தலைமையில் சி.பி.ஐ விசாரணைக்கு கடந்த 2014ல் உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய சி.பி.ஐ முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடியவர் திமுகவின் முக்கிய வழக்கறிஞர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ.
இதில் கே.பாலச்சந்திரன் இறந்துவிட்டதால் மற்ற 11 பேர் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இறுதியாக, அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்த பிறகு 26.02.2024 அன்று சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அளித்த தீர்ப்பில், முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன், கெளரி சங்கர் உள்ளிட்ட 11 பேர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார் என்பது அவலமான உண்மை.
யாரும் எதிர்பாராத இந்த அதிர்ச்சியான தீர்ப்பை எதிர்த்து தனி ஆளாக சாராய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக புவனேஸ்வரனின் தந்தை சிவா வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி திமுகவின் முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், இதேபோன்ற நில அபகரிப்பு குற்றச்சாட்டில் ஆகஸ்ட் 2011 இல் கைது செய்யப்பட்டார், ஆனால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் கடுமையான குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் தான் சமீபத்தில் மேயர் ப்ரியாவை உரசியதாக சர்ச்சையில் மாட்டினார் என்பது தனிக்கதை.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
மேற்குறிப்பிட்ட இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு கும்பலால் யாரெல்லாம் மிரட்டப்பட்டார்கள் என்று ஏறக்குறைய 32 பேரிடம் போலீசார் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் எங்கேயும் ஆம்ஸ்ட்ராங் பெயர் குறிப்பிடப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ரெங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிருப்பிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, சிபிஐ மற்றும் ரெங்கநாதன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து, கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரங்கநாதன் பெயர் விடுபட்டதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த புவனேஸ்வரனின் தந்தை ஆம்ஸ்ட்ராங் பெயர் இல்லை என்பதை எப்படி மறந்தார் என்பது மாயமாக இருக்கிறது.

அவருடைய தந்தையே வழக்கில் சேர்க்கப்படாத ஆம்ஸ்ட்ராங்கை இந்த பதிவில் ஆம்ஸ்ட்ராங் பெயரை சேர்த்து அவதூறு பரப்பும் நோக்கம் என்ன? ்இது போன்று எத்தனை பொய்யும் புரட்டுகளையும் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு எதிராக சொல்லியிருப்பார்கள்?
ஆம்ஸ்ட்ராங் தவறே செய்யாதவர், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். 2000-ன் தொடக்கத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று அவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருந்தன. அந்த பேர் தான் அவரை பெரம்பூரில் பிரபலமாக்கியது.
2006-ல் மாமன்ற உறுப்பினராகவும் உட்கார வைத்தது. பிறகு, 2008-ல் பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவராக்கியது. அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு தன் மீதான வழக்குகள் அனைத்தையும் நடத்தி அதிலிருந்து வெளியே வருகிறார். இன்றைய தேதியில் வழக்கு இல்லாத அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர்.
பௌத்தம், அம்பேத்கர் அரசியல், மாணவர்களுக்கு கல்வி, சமூக ஒற்றுமை குறித்து அதிகம் பேசுவதில் கவனம் செலுத்துகிறார். தான் கொண்ட கொள்கைக்கு ஏற்றவாறு பௌத்த விகார் நிறுவுனார். இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்த உண்மைகள்.
நமக்குத் தெரியாமல் அதிகார மட்டத்தில் என்ன நடந்திருக்கும், யாரோடெல்லாம் அவர் தொடர்பில் இருந்தார் என்ற கற்பனைக்கெல்லாம் நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அதற்கெல்லாம் நம்மிடம் ஆதாரம் இல்லை.
பத்திரிக்கையாளர் மணி சொல்வதைப் போல, ஒருவரை புகழ்வதற்கு ஆதாரம் தேவையில்லை. ஆனால் ஒருவரை பற்றி விமர்சனம் செய்யும்போது கட்டாயம் ஆதாரம் தேவை. ஆதாரம் இல்லாமல் செய்யும் எதுவாக இருப்பினும் அது அவதூறு தான்.
புவனேஸ்வரன் கொலை சம்பந்தப்பட்ட வழக்கில் ஈடுபடாத அவரை உள்ளே இழுத்து அவதூறு செய்வது அய்யோக்கியத்தனம் இல்லையா? பகுசன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் ஒருவேளை மிரட்டி இருக்கலாம், மறுப்பதற்கில்லை. அதன் காரணமாகவே அவரை குற்றவாளி ஆக்கிவிட முடியுமா?
ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதற்காக முதல்வருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியுமா? அது மடத்தனம் ஆகாதா?

வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய ஆகிய மாவட்டங்களில் நடக்கும் அத்தனை தொழில் போட்டி கொலைகளுக்கும், சண்டைகளுக்கும் ஆம்ஸ்ட்ராங் பின்னணியில் இருக்கிறார் என்று போகிற போக்கில் வேறு இழுத்து விட்டு இருக்கிறார்கள். அதில் பெரும்பாலும் தலித்துகள் தான் ஈடுபடுவதாக தலித்துகள் மீதான வெறுப்பையும் கொட்டி இருக்கிறார்கள்.
அவர் உருவாக்கிய வழக்கறிஞர்கள் எல்லாம் தங்களின் நிழல் உலக தொழில் சார்ந்த நலனுக்கானது என்றும் கொச்சைப்படுத்துகிறார்கள். இப்படி ஒரு தரங்கெட்ட அவதூறை யாராவது வைக்க முடியுமா?
அவர் உருவாக்கிய வழக்கறிஞர்களில் யாரையாவது ஒருவரையாவது இவர்கள் சந்தித்தது உண்டா? எதை அடிப்படையாக வைத்து அப்படி ஒரு கொச்சையான விமர்சனத்தை வைத்தார்கள்?
ஆம்ஸ்ட்ராங் பேசிய சமூக நல்லிணக்க கருத்துக்களை பார்த்து எல்லோரும் சிலாகிக்கிறார்களாம். ஆனால் அவர் அதன்படி வாழவில்லையாம். எப்பேர்ப்பட்ட ஆய்வு?
இங்கே பெரியாரையும், மார்க்சையும் பேசக்கூடியவர்கள் எல்லாம் அதன் நெறிப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? தங்களைத் தவிர வேறு யாரு அரசியல் களத்திற்கு வந்தாலும் அவர்கள் பிழைப்புக்காகதான் கடை விரிக்கிறார்கள் என்ற மட்டமான அவதூறை இங்கேதான் பார்க்க முடிகிறது.
“உண்மையில் போர்க்குணமிக்க ஒரு கட்சித் தலைவரை அரசியல்படுத்தி தமிழகம் முழுமையும் உள்ள சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பட்டியலின மக்களின் காவலராக நிற்கவைக்க வக்கற்றவர்கள்..” என்று தலித்துகள் மீதான திடீர் பாசத்தை பொழிகிறார்.

இன்று தமிழ்நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக நடந்து வரும் சாதித் தாக்குதல், ஆணவ கொலைகள் எல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலித் தலைமையால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை. சமூக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து தமிழகமே ஸ்தம்பிக்கும்படி போராட்டம் செய்திருக்கலாமே. தலித்துகளின் விடுதலைக்கான வழிகாட்டியாய் முன்மாதிரியாய் நீங்கள் இருக்கலாமே. யார் கையை பிடித்து தடுத்தார்கள்?
இது எதையும் செய்ய வக்கற்றவர்கள், எளிதாக அவர் ஒருவரைப் பற்றி அவதூறு பரப்புவது காழ்ப்புணர்ச்சி, இயலாமையின் வெளிப்பாடு, வெட்கக்கேடு.!
ஒரு மனிதன் தன்னால் முடிந்ததை, தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய சமூகம் மட்டுமல்லாது பிற சமூக இளைஞர்களுக்கும் தன்னால் ஆனதை செய்திருக்கிறான். இளைஞர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறான் என்பது அவன் மரணத்திற்கு பிறகு கூடிய கூட்டமே சாட்சி.
எல்லா கட்சியினரும் தங்கள் சொந்த பாக்கெட்டில் இருந்து யாருக்கும் எதையும் செய்துவிடவில்லை. லஞ்சம், ஊழல், ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என்று கோடிகளில் புரள்கிறார்கள். அதில் வரும் பணத்தைக் கொண்டுதான் கட்சி நடத்துகிறார்கள். அவர்கள் யாரும் புனிதர்கள் அல்ல. ஆனால் விமர்சனம் என்று வரும்போது தலித்துகளின் குரல் வளையை நெறிப்பதும், மற்றவர்களை தடவி கொடுப்பதுமாகத்தான் இருக்கிறது.
ஏன் இந்த பாரபட்சம்? நீங்கள் தான் பதிலளிக்க வேண்டும்.!
-ரஞ்சித்