ஜாதி சார்ந்து வழங்கப்படும் பொறுப்புகள் – த.வெ.க மகளிர் அணி பெண் பரபரப்பு புகார் !
கட்சியில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை ஜாதி சார்ந்த உறவினர்களை மட்டும் அங்கீகரிப்பதாக தேனி மாவட்ட செயலாளர்கள் மீது த.வெ.க மகளிர் அணியை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் !
தேனி மாவட்ட மகளிர் அணியை சேர்ந்தவர் சத்யா இவர் தேனி மாவட்டச் செயலாளர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது தேனி மாவட்ட த.வெ.க நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது.
இதில் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக பாண்டி, தேனி வடக்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ந்நிலையில் தேனி மகளிர் அணியை சேர்ந்த சத்யா வெளியிட்ட வீடியோவில் விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோதே இயக்கத்திற்காகவும் தற்போது கட்சிக்காகவும் கடந்த ஏழு வருடங்களாக உழைத்து வரும் தனக்கு பொறுப்பு வழங்கக் கூடாது என்பதற்காக மாவட்ட செயலாளர்கள் தன் மீது குற்றம் சுமத்துவதாக புகார் தெரிவித்தார்.
இரண்டு மாவட்டச் செயலாளர்களும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது உறவினர் பெண் மூலம் பொதுச் செயலாளர் ஆனந்திடம் தன் மீது நாலு வழக்கு உள்ளதாகவும் தனக்கு மகளிர் அணி பொறுப்பாளர் வழங்கக் கூடாது என தவறான தகவல்களை கூறியதாக தெரிவித்தார்.
தன் மீது உள்ள வழக்குகள் குறித்து தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டால் அதற்கு உரிய பதில் இல்லை, இது குறித்து தான் ஆனந்திடம் தன் மீது எந்த வழக்கும் இல்லை என்று ஆதாரத்துடன் தெரிவித்தும் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கட்சிக்காக இத்தனை வருடங்களாக தாங்கள் செய்த வேலையை அவமானப்படுத்துவது போல் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கட்சியின் மேல் இடத்தில் இருந்து தான் நன்றாக வேலை பார்த்து வருவதாகவும், தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததால் இதை பொறுக்காத தேனி மாவட்ட செயலாளர் என் மீது இதுபோன்று புகார் தெரிவிப்பதாக கூறினார்.
கட்சியின் சார்பில் அனைத்து நிர்வாகிகளின் பங்களிப்போடு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். ஆனால் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி அவர் மட்டுமே வழங்கியது போல் கூறி வருவதாக தெரிவித்தார்.
த.வெ.க தலைவர் விஜய்க்கு இங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிவதில்லை எனவே இந்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
— ஜெய்ஸ்ரீராம்.